புறநானூறு
பாடல் எண் 13


புறநானூற்றுப் பாடல்

( சோழன் முடித்தலைக் கோப்பெருநற்கிள்ளி சோழநாட்டு வேந்தனாய் இருந்து வருகையில் தன்னொடு பகை கொண்ட சேர மன்னரொடு போர் தொடரும் கருத்தினனாய் கருவூரை முற்றுகையிட்டிருந்தான். ஒரு நாள் சோழன் கோப்பெருநற்கிள்ளி கருவூரை நோக்கிச் சென்று கொண்டிருக்கையில் அவன் ஏறிய களிறு மதம் படுவதாயிற்று. அக்காலை ஆசிரியர் உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் என்றும் சான்றோர் சேர மன்னனுடன் அவனது அரசமாளிகையாகிய வேண்மாடத்துமேல் இருந்தார். சோழன் களிற்றுமிசை இருப்பதும், களிறு மதம்பட்டுத் திரிவதும், பாகரும் வீரரும் அதனை அடக்க முயல்வதும் கண்ட சேரமான் மோசியாருக்குக் காட்ட, அவர் இப்பாட்டைப் பாடினார் )

( பாடலின் மீது சுட்டியை நகர்த்திப் பொருளுணர்க )

கங


இவனியா ரென்குவை யாயி னிவனே
புலிநிறக் கவசம் பூம்பொறி சிதைய
எய்கணை கிழித்த பகட்டெழின் மார்பின்
மறலி யன்ன களிற்றுமிசை யோனே
களிறே முந்நீர் வழங்கும் நாவாய் போலவும்
பன்மீ னாப்பட் டிங்கள் போலவும்
கறவினத் தன்ன வாளோர் மொய்ப்ப
மரீஇயோ ரறிபாது மைந்துபட் டன்றே
நோயில னாகிப் பெயர்கதி லம்ம
பழன மஞ்ஞை யுகுத்த பீலி
கழனியுழவர் சூட்டொடு தொகுக்கும்
கொழுமீன் விளைந்த கள்ளின்
விழுநீர் வேலி நாடுகிழ வோனே.


( பாடலின் விளக்கம் )



இப்பாட்டின் கண், களிற்று மேலிருந்த சோழனை இன்னானென்று அறியாது கேட்ட சேரனுக்குக் களிற்று மேற்செல்வோனாகிய இவன் யாரெனின், நீர்வளத்தால் மிக்கு விளைந்த நெல்லை அறுக்கும் உழவர், மீனும் கள்ளும் பெறும் நீர் நாட்டை உடையவன், இவன் களிறு மதம்பட்டதனால் இவன் நோயின்றிச் செல்வானாதல் வேண்டும் என்று குறிக்கின்றார்.



தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,