நாலடியார் பாடல்கள்

நன்றி : சமணமுனிவர்கள் இயற்றிய
நாலடியார் மூலமும் தெளிபொருள் விளக்கமும் நூல்

உரையாசிரியர்கள் :
வை.மு.சடகோபராமாநுஜாசாரியர், சே.கிருஷ்ணமாசாரியர். (1921)



15 ஆம் அதிகாரம் - கல்வி

( பாடலின் மீது சுட்டியை நகர்த்திப் பொருளுணர்க )

பாடல்
எண்
139


கல்லாரே யாயினுங் கற்றாரைச் சேர்ந்தொழுகி
னல்லறிவு நாளுந் தலைப்படுவர் - தொல்சிறப்பி
னெண்ணிறப் பாதிரிப்பூச் சேர்தலாற் புத்தோடு
தண்ணீர்க்குத் தான்பயந் தாங்கு.


( பாடலின் விளக்கம் )

புத்தோடு கல்லார்க்கும், பாதிரிப்பூ கற்றார்க்கும், நல்ல பரிமளம் நல்லறிவுக்கும் உவமை யெனக் காண்க. முன்னே கல்லாதவர் பின்பு கற்றோரது சேர்க்கையால் தாம் அடைந்த அறிவைத் தம்மைச் சேர்ந்தவர்க்குந் தருவரென்பது பெறப்பட்டது. புதுப் பானையில் பாதிரி மலர்களையும், நீரையும் பெய்து வைத்தால், அந்நீர் நல்ல மணத்தைப் பெறுமென்பது அறிக. பூவொரு சேர்ந்த நாரும் மணம் பெறும் என்ற பழமொழியோடு ஒத்தது இவ்வுவமை.


16 ஆம் அதிகாரம் - மேன்மக்கள்

( பாடலின் மீது சுட்டியை நகர்த்திப் பொருளுணர்க )

பாடல்
எண்
152


இசையு மெனினு மிசையா தெனினும்
வசைதீர வெண்ணுவர் சான்றோர் - விசையி
னரிமா வுளங்கிழித்த வம்பினிற் றீதோ
அரிமாப் பிழைப்பெய்த கோல்


( பாடலின் விளக்கம் )

சிங்கத்தின் மேல் அம்பு எய்து அது தவறினாலும் பெருமையுண்டு, நரியின் மேல் அம்பு எய்து அதன் மார்பைப் பிளந்தாலும் பெருமையில்லை. அதுபோலச் செயற்கரிய பெரிய காரியத்தைத் தொடங்கி முயன்று அது முடிவு போகாதாயினும் பெருமையுண்டு. இழிவான தொழிலைத் தொடங்கி அது முடிந்தாலும் பெருமையில்லை. ஆதலால் பெரியோர் தம்மிடத்தில் பழிப்பு உண்டாகாதபடி மேலான காரியத்தையே செய்ய நினைப்பர் என்று கருத்து.


22 ஆம் அதிகாரம் - நட்பாராய்தல்

( பாடலின் மீது சுட்டியை நகர்த்திப் பொருளுணர்க )

பாடல்
எண்
213


யானை யனையவர் நண்பொரீஇ நாயனையார்
கேண்மை கெழீஇக் கொளல் வேண்டும் - யானை
யறிந்தறிந்தும் பாகனையே கொல்லு மெறிந்தவேன்
மெய்யதா வால்குழைக்கு நாய்

( பாடலின் விளக்கம் )

பலகாலம் தம்மாற் பற்பலவுதவிகளைப் பெற்றிருந்தும் அவற்றை யெல்லாம் அடியோடு மறந்து தம்மிடம் யாதாயினும் ஒரு பொழுது கோபத்திற்குக் காரணமொன்று காணப்பட்டதாயின் அதனையே பிரதானமாகக் கொண்டு, எப்பொழுதும் மனத்திலே மறவாது அடக்கி வைத்திருந்து சமயம் பார்த்துக் அழிக்குந் தன்மையரோடு நட்புச் செய்யலாகாது. தம்மாற் செய்ய்ப்பட்டு வரும் பெரிய துன்பங்கள் பலவற்றையும் மறந்திட்டுத் தம்மால் முன்பு ஒருகாலத்துச் செய்யப்பட்டதொரு சிறிய உதவியையே உள்ளத்திற் கொண்டு பாராட்டும் இயல்பினருடனே நட்புக் கொள்ள வேண்டும் என்பதாம்


26 ஆம் அதிகாரம் - அறிவின்மை

( பாடலின் மீது சுட்டியை நகர்த்திப் பொருளுணர்க )

பாடல்
எண்
259


பொழிந்தினிது நாறினும் பூமிசைதல் செல்லா
திழிந்தவை காமுறூஉ மீப்போ - லிழிந்தவை
தாங்கலந்த நெஞ்சினார்க் கென்னாகுந் தக்கார் வாய்த்
தேன்கலந்த தேற்றச்சொற் றேர்வு.

( பாடலின் விளக்கம் )

தாமாகவும் அறியாமல் பிறர் சொன்னாலும் உணராத பேதைகளுக்கு அஃறிணைப் பொருள்களில் இழிவை யுடைத்தான ஈயை உவமை எடுத்துக்கூறி அவர்கள் சிறுமையை விளக்கினார்.



2 ஆம் அதிகாரம் - இளமை நிலையாமை

( பாடலின் மீது சுட்டியை நகர்த்திப் பொருளுணர்க )

௧௧


நரைவரு மென்றெண்ணி நல்லறி வாளர்
குழவி யிடத்தே துறந்தார்- புரைதீரா
மன்னா விளமை மகிழ்ந்தாரே கோலூன்றி
யின்னாங் கெழுந்திருப் பார்.


( பாடலின் விளக்கம் )


இளமைப் பருவத்தினது நிலையாமையை உணர்த்துவது. இங்கே இளமை என்றது யெளவனம். அது பதினாறு பிராயத்துக்கு மேல் முப்பத்திரண்டு பிராயத்துக்குள் சிற்றின்ப விடயங்களில் மயங்குகின்ற காளைப்பருவம். புல்லறிவுடையார் பெரும்பான்மையும் முறையே பற்றுச் செய்வது சிற்றின்பத்திற்கு ஏதுவாகிய செல்வத்தினிடத்தும், அதனை அனுபவித்தற்கு உரிய இளமையினிடத்தும், அப்பருவத்திற்கு இடமாகிய உடம்பினிடத்துமே யாதலால், அம்முறையே, இந்த இளமை நிலையாமை - செல்வநிலையாமையின் பின் வைக்கப்பட்டது. திருவள்ளுவனாரும் நிலையாமை யென்னும் அதிகாரத்துள் இம்முறை தோன்றக் கூறியவாறும் காண்க.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,