குறுந்தொகைப் பாடல்கள்






தலைவன் கூற்று

( பாடலின் மீது சுட்டியை நகர்த்திப் பொருளுணர்க )

பாடல்
எண்
40


யாயு ஞாயும் யாரா கியரோ
எந்தையு நுந்தையு மெம்முறைக் கேளிர்
யானு நீயு மெவ்வழி யறிதும்
செம்புலப் பெயனீர் போல
அன்புடை நெஞ்சந் தாம்கலந் தனவே.

( பாடலின் விளக்கம் )

தலைவன் பிரிவானோ என்று ஐயுற்றவிடத்து அதனைக் குறிப்பாலறிந்த தலைவன் - ஒரு தொடர்புமில்லாத நம் ஊழின் வன்னையால் ஒன்றுபட்டோ மாதலின் இனி நம்மிடையே பிரிவு உண்டாகாது - என்று உணர்த்தியது.




தலைவி கூற்று.

( பாடலின் மீது சுட்டியை நகர்த்திப் பொருளுணர்க )

பாடல்
எண்
25


யாருமில்லைத் தானே கள்வன்
தானது பொய்ப்பின் யானெவன் செய்கோ
தினைத்தா ளன்ன சிறுபசுங் கால
ஒழுகுநீ ராரல் பார்க்கும்
குருகு முண்டு தான் மணந்த ஞான்றே

( பாடலின் விளக்கம் )

தலைவன் நெடுங்காலம் மணஞ்செய்து கொள்ளாமலிருந்தல் பற்றி வருந்திய தலைவி, தலைவர் அருள் பூண்டு என்னை வரைந்து கொண்டாலன்றி எனக்கு உதவி செய்யத் தக்க சான்று பகர்வார் வேறு ஒருவரும் இலர் - என்று கூறியது. மணம் செய்தல் நீட்டித்த விடத்துத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது.




தலைவி கூற்று

( பாடலின் மீது சுட்டியை நகர்த்திப் பொருளுணர்க )

பாடல்
எண்
49


அணிற்பல் லன்ன கொங்கு முதிர் முண்டகத்து
மணிக்கே ழன்ன மாநீர்ச் சேர்ப்ப
இம்மை மாறி மறுமை யாயினும்
நீயா கியரென் கணவனை
யானா கியர் நின்னெஞ்சுநேர் பவளே

( பாடலின் விளக்கம் )

தலைமகன் பரத்தையிற் பிரிந்து மீண்டு வந்த காலத்து முன்னிருந்த ஆற்றாமை நீங்கி, அவனோடு அளவளாவி, நாம் பிறவி தோறும் அன்புடைய கணவனும் மனைவியுமென இருப்போமாக - என்று தலைவி கூறியது.




தலைவி கூற்று

( பாடலின் மீது சுட்டியை நகர்த்திப் பொருளுணர்க )

பாடல்
எண்
57


பூவிடைப் படினும் யாண்டுகழிந் தன்ன
நீருறை மகன்றிற் புணர்ச்சி போலப்
பிரிவரி தாகிய தண்டாக் காமமொ
டுடனுயிர் போகுக தில்ல கடனறிந்
திருவே மாகிய வுலகத்
தொருவே மாகிய புன்மை நா முயற்கே.

( பாடலின் விளக்கம் )

தாய் முதலியவர்களாற் காக்கப்படும் தலைவி, தலைவனைப் பிரிந்திருத்தற்கு ஆற்றாளாகித் தோழியை நோக்கி - தலைவரும் யானும் தனித்திருப்பினும் ஒன்றாக இருந்து ஒருங்கே உயிர் விடுதல் நன்று - என்று கூறியது.



தோழி கூற்று

( பாடலின் மீது சுட்டியை நகர்த்திப் பொருளுணர்க )

பாடல்
எண்
59


பதலைப் பாணிப் பரிசிலர் கோமான்
அரலைக் குன்றத் தகல்வாய்க் குண்டுசுனைக்
குவளையொடு பொதிந்த குளவி நாறு நின்
நறுநுதன் மறப்பரோ மற்ற முயலவும்
சுரம்பல விலங்கிய வரும் பொருள்
நிரம்பா வாகலி னீடலோ வின்றே

( பாடலின் விளக்கம் )

தலைவன் பொருள் தேடச் சென்ற காலத்தில் அவனது பிரிவை ஆற்றாமல் வருந்திய தலைவியை நோக்கி - தலைவர் நின்னை மறவார். தமக்கு வேண்டிய பொருளைப் பெற்று விரைவில் மீளுவர் - என்று தோழி கூறியது.



நன்றி : குறுந்தொகை மூலமும் உரையும் நூல்
உரையாசிரியர் : டாக்டர் உ.வே.சாமிநாதையரவர்கள். (1962)



தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,