இசை நூல்களைப் பாதுகாக்க உதவவும்.

தஞ்சை. இராவு சாகிபு. மு. ஆபிரகாம் பண்டிதரின் கருணாமிர்த சாகரம் தொகுதி I, II (1917) கருணாமிர்த சாகரத் திரட்டு என்கிற நூல்கள். மதுரை எம். கே. எம். பொன்னுச்சாமியின் பூர்வீக சங்கீத உண்மை (1930) என்கிற நூல், விபுலானந்த அடிகளாரின் யாழ் நூல் (1947) என்கிற நூல் -- இன்று வரை இசையை ஆய்வு செய்து வெளியிடப்பட்ட நூல்களாகக் காட்டப்படுகின்றன.

இவற்றைத் தொடர்ந்து சங்க இலக்கியங்களிலும், சிலப்பதிகாரத்திலும் உள்ள இசைக்கூறுகள் பல்வேறு இசை அறிஞர்களால் ஆய்வு செய்து வெளிப்படுத்தப்பட்டுள்ளன. குடந்தை ப. சுந்தரேசன், கு.கோதண்டபாணி பிள்ளை, பேராசிரியர். க.வெள்ளை வாரணனார், பேராசிரியர். தனபாண்டியன், பேராசிரியர். வீ.ப.கா.சுந்தரம், பேராசிரியர். சாம்பமூர்த்தி, அரிமளம் சு.பத்மநாபன், பி.டி.ஆர்.கமலை தியாகராஜன், முனைவர். எஸ்.இராமநாதன், முனைவர்.சேலம். ஜெயலட்சுமி, முனைவர்.எஸ்.சீதா, இசை அறிஞர் சுரும்பியன் போன்றவர்கள் இத்தகைய ஆய்வில் முதன்மையாளர்களாகக் கருதப்படுகிறார்கள். தமிழிசைக்காக இயங்கியவர்களது பதிவுகளையும், அவர்களது படைப்பாக்கங்களையும் வரிசைப்படுத்தத் தமிழம்.வலை விரும்புகிறது.

இசை தொடர்பான அரிய நூல்களையும், இசைக்கான பல்வேறு படிநிலை நூல்களையும், இசை கற்றல் கற்பித்தலுக்கான நூல்களையும் வைத்துள்ளவர்கள் அருள்கூர்ந்து அவற்றைப் பாதுகாக்க உதவவும். தாங்கள் தொடர்பு கொண்டால் நூல்களை நான் படவடிவக் கோப்புகளாக்கித் தருகிறேன் - பொள்ளாச்சி நசன் - 9788552061

சங்கப் பாடல்களும் அதன் இசை வடிவங்களும்.
THAMIZHAM FM......கேட்கச் ......

....தொல்காப்பியம் முழுமையும் மைசூர் நடுவனரசின் ஆவணப்பாதுகாப்பு அமைப்பின் வழியாக முற்றோதல் என்கிற முறையில் பல்வேறு தமிழாளர்களைக் கொண்டு திருமுருகனார் அவர்களது தலைமையில் இசை வடிவிலான அரிய, ஈர்ப்புடைய வடிவமாகப் பாதுகாக்கப்பட்டுள்ளது.

....திருக்குறள் பல்வேறு வடிவங்களில் உலகமக்களால் பாடிப் பதிவு செய்யப்பட்டுள்ளது. (தமிழம்.பண்பலையில் கேட்கலாம்)..

....திருக்குறள் பல்வேறு அமைப்புகளால் முற்றோதல் வடிவிலும்,
....ஈர்ப்புடைய பல்வேறு இசை வடிவிலும்,
....பாதி படித்தும் பாதி இசைத்தும் (அதிகாரத்தின் ஐந்து குறட்பாக்களைப் படித்தும், ஐந்து குறட்பாக்களை இசை வடிவில் இசைத்தும்) பதிவு செய்யப்பட்டுள்ளது.
....ஒவ்வொரு திருக்குறளையும் இரண்டு முறை இசைத்தும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
....திருக்குறளின் இன்பத்துப்பால் முழுமையும் திருக்குறள் இசைமலர் என்கிற வடிவில் நுட்பமாக, இசைக்குறிப்புகளுடன் பாடப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
....திருக்குறள் நம் மறை என்பதற்கிணங்க மந்திரம் ஓதுவதைப்போல திருக்குறளை ஓதியும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
....வெளிநாட்டு இசையிலும் திருக்குறள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
....திருக்குறளுக்கான விளக்கத்தைச் செறிவான ஆங்கிலத்தில் விளக்கியும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
....பாடல்களைத் தமிழம்.பண்பலையில் கேட்கலாம்..

....தேவாரம், திருவாசகம் போன்றவைகள் பல்வேறு ஓதுவார்களால் இசை வடிவிலும், ஓதுகிற முறையிலும், முழுமையாக இசைக்கப்பட்டுள்ளன,

....சிவாக்கியர் பாடல்கள் முழுமையாக பாடி பதிவு செய்யப்பட்டுள்ளன. சித்தர் பாடல்களில் கொங்கணர், பாம்பாட்டி, அகப்பேய், பத்ரகிரியார், குதம்பைச்சித்தர், சட்டைமுனி போன்றவர்களது பாடல்கள் சிலவும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

....ஞானக்கும்மி, வாலைக்கும்மி போன்றவைகளும் இசைவடிவில் இசைக்கப்பட்டுள்ளன.

....திருப்பாவை, திருவெம்பாவை போன்றவைகளும் இசையோடு பாடப்பட்டுள்ளன.

....ஔவையர் இயற்றிய ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன், நல்வழி, மூதுரை பாடல்கள் இசையோடு பாடப்பட்டுள்ளன.

....பெரும்பாலான பாரதியார், பாரதிதாசன் பாடல்கள் இசைவடிவில் திரைஇசை வடிவிலும், தனியாகவும் பாடப்பட்டு விட்டன. ....இவை அனைத்தையும் தமிழம்.பண்பலையில் நீங்கள் கேட்கலாம்..

....விடுபட்ட சங்க இலக்கியப் பாடல்களையும், பிற்காலப் பாடல்களையும் பாடித் தொகுக்க வேண்டும். மேலும் தமிழிசை பற்றிய புரிதலை முதன்மைப்படுத்துகிற இசைவடிவங்களையும் பாடிப் பதிவு செய்து பாதுகாக்கப்பட வேண்டும். இசை பற்றிய அடிப்படை பயிற்றுவித்தலுக்கான படிநிலைகளையும் பாடித் தொகுத்தால் அது பின்வரும் தலைமுறையினருக்குப் படிக்கட்டாக இருந்து வழிநடத்தும்.

ஆற்றலும் விருப்பும் உள்ளவர்கள் இசையோடு பாடித் தொகுக்க உதவுமாறு தமிழம்.வலை அழைப்பு விடுக்கிறது. ஆற்றலுள்ளவர்கள் அருள்கூர்ந்து இணைந்து இயங்குமாறு அன்போடு வேண்டுகிறேன் - பொள்ளாச்சி நசன் - 9788552061 - pollachinasan@gmail.com