கல்வி ஆராய்ச்சிகள்

வரிசை எண் : 04

மழலையர் பாடல்கள் பாடி மகிழ்ந்திட

பாடல்களைப் பாடுவது என்பது 3 - 4 அகவையுடைய மழலையர்களுக்கு மகிழ்வானது. அதுவும் இசையோடு அந்தப் பாடல்களைப் பாடினால் அவர்கள் பாடிக்கொண்டே ஆடியும் மகிழ்வார்கள்.

மழலையர்களுக்குரிய பயிற்சிப் பாடல்கள் அவர்களது தாய்மொழியில், எளிமையானதாக, புரியக்கூடியதாக, அவர்களது சூழலில் உள்ளவற்றைக் காட்டுவதாக, மகிழ்வூட்டுவதாக இருக்கவேண்டும். விலங்குகள் கத்தும் ஓசை இடையிடையே வருவதாக, ஊர்திகளின் ஓசை வருவதாக இருந்தால் அந்தப் பாடல் அவர்களது நினைவில் ஆழமாகப் பதியும்.

பாடல்களின் மையக் கருத்து அச்சுறுத்துவதாகவோ, மூடப்பழக்க வழக்கங்களை வலியுறுத்துவதாகவோ அமையாமல் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவேண்டும். அவலச் சுவையையோ, அடுத்தவரைக் கிண்டலடிப்பது போலவோ, திட்டுவது போலவே பாடல்கள் அமையாமல் இருப்பது நலம். இதுதான் சரி, இப்படிச் செய், என ஆணையிடுவதாக அமையக்கூடாது.

இதுபோன்ற தரமான, தமிழ்ச் சொற்களையுடைய, உயர்கருத்துப் பாடல்களை இளம் மழலையர்கள் மகிழ்வோடு பாடிப் பழகப் பயிற்றுவிக்கவேண்டும். இதனால் கற்பனை வளமும், மொழியுணர்வும், ஆளுமைத்திறனும், நுட்பமும் மழலையர்களுக்குக் கிட்டும்.




மழலையர் பாடல்கள்
3 முதல் 4அகவையினருக்கானது
(இளம் மழலையர்களுக்கான பாடல்கள்)

கதிரவன் எழுவான் கிழக்கு
கடமை முடித்தால் மேற்கு
இதுவே இயற்கை வழக்கு
இதுபோல் உன்னைப் பழக்கு.

மழையே மழையே வாராய்
மண்ணில் பெய்வாய் சீராய்
வெள்ளம் பெருகும் ஆறாய்
மகிழும் உயிர்கள் பாராய்.

அம்மா சொல்லும் மாடு
அன்னை நிலமே நாடு
சும்மா இருந்தால் கேடு
தூய தமிழில் பாடு.

கிளியே கிளியே கிளியக்கா
கிளையில் தாவுது குரங்கக்கா
கிளியும் சொல்லுது அக்கக்கா
கிள்ளை மொழியோ இனிதக்கா.

பட்டாம்பூச்சி பறக்குது பார்
பள்ளிக்கூடம் திறக்குது பார்
விட்டபாடம் தொடங்குது பார்
விடுமுறை எல்லாம் கழிந்தது பார்.
புதுவை - தமிழ்நெஞ்சன்


திங்கள் செவ்வாய் அறிவன்
வியாழன் வெள்ளி காரி
ஞாயி றோடு ஏழு
நாட்களே ஒரு கிழமை.

ஓடிவந்து நில்லு
ஒன்றிரண்டு சொல்லு
ஏடெடுத்துக் கல்லு
என்றும் பள்ளி செல்லு.

அதோ பாரு மயிலு
அழகாய்ப் பாடுங் குயிலு
சூடு ஏற்றம் வெயிலு
சுணக்கம் விட்டு முயலு.
அர. சந்திரசேகரன் - புதுச்சேரி


குட்டி முயல் ஓடுது
குதித்துக் குதித்து ஓடுது
தொட்டுப் பிடிக்க ஓடினேன்
தாவிக் குதித்து ஓடுது.

தட்டு தட்டு கைதட்டு
தம்பி, பாப்பா கைகதட்டு
மொட்டுக் கையை நீதட்டு
முத்தம் தருவேன் கைதட்டு.

பள்ளி செலலப் போகிறேன்
பாடம் படிக்கப் போகிறேன்
படித்து எழுதி நானுமே
பாரில் உயரப் போகிறேன்.
துரை. மூர்த்தி - ஆர்க்காடு


தமிழே வணக்ககம்
தாயே வணக்கம்
அமிழ்தே வணக்கம்
அருள்வாய் எனக்கும்.

அம்மா அம்மா தமிழம்மா
அமிழ்தம் உன்றன் மொழியம்மா
அன்புப் பிள்ளை நானம்மா
அருள்வாய் எனக்கும் நியம்மா.
அரி.இல.தமிழடியான் - உளுந்தூர்ப்பேட்டை


பெரிய யாணை வந்தது
சிறிய கண்ணால் பார்த்தது
அசைந்து அசைந்து நடந்தது
அச்சம் விலகிப் போனது.

சிட்டுக் குருவி அங்கேபார்
சிறகை விரிக்கும் அழகைப்பார்
பட்டுப் போன்ற மேனியை
படபடக்கும் அழகைப் பார்.
க.சண்முக சிதம்பரம் - தரகம்பட்டி.


கோழி கோழி வாவா
கொண்டைக் கோழி வாவா
கொல்லைப் பக்கம் வாவா
கொத்தித் தின்ன வாவா

குவாக் குவாக் வாத்து
குட்டைக் காலு வாத்து
குதித்து ஓடும் வாத்து
குளத்தில் நீந்தும் வாத்து.
அ.பக்கிரிசாமி - திருநள்ளாறு


பாட்டி எனக்குப பாட்டி
அன்பு மிக்க பாட்டி
தங்க நிலாக் காட்டி
சோறு ஊட்டும் பாட்டி.

பூ பூ முல்லைப் பூ
குட்டி குட்டி வெள்ளைப்பூ
வீட்டுத் தோட்டத் தரையிலே
கோலம் போடும் வெள்ளைப்பூ.
மி. அமலன் - திருச்சி


தமிழே எங்கள் மொழியாகும்
தாயைப் போன்றே துணையாகும்
என்றும் வாழ்வில் கற்றிடுவோம்
ஏற்றம் மிகவே வாழ்ந்திடுவோம்.

மரங்கள் வீட்டில் வளர்த்திடுவோம்
பயன்கள் பலவும் பெற்றிடுவோம்
நிழலும் காற்றும் ஈந்திடுமே
நீங்கா வெப்பம் தணிந்திடுமே.
அர. செல்வமணி - சத்தியமங்கலம்


புள்ளிப் புள்ளி மான்கள்
துள்ளித் துள்ளி ஓடும்
முட்டி முட்டிக் கன்றும்
சொட்டிச் சொட்டிக் குடிக்கும்

முத்தமிழ் மொட்டே சாய்ந்தாடு
முத்த மழையே சாய்நதாடு
முத்தின் ஒளியே சாய்ந்தாடு
தித்திக்கும் தேனே சாய்ந்தாடு.
வீர. விநாயகம் - ஆரணி


அம்மா என்னைப் பாரம்மா
அன்புப் பிள்ளை நானம்மா
அழகாய்ப் பாடு வேனம்மா
அனைத்தும் தமிழ் தானம்மா.
துரை. தில்லான் - திண்டுக்கல்


சின்னஞ் சிறிய பொம்மை
சிரிக்கும் அழகு பொம்மை
கண்ணைக் கவரும் பொம்மை
காசு கேட்கா பொம்மை.
அருவி - திருக்குவளை.


கொடியில் பூத்த பூக்கள்
கொள்ளை அழகு பூக்கள்
செல்வி தலையில் பூக்கள்
சிரிக்கும் முல்லைப் பூக்கள்.
து.ஆதிநாராயணமூர்த்தி - திமிரி


அமுதம் எஙகே சொல்லம்மா
அழகுத் தமிழின் சொல்லம்மா
நமது கண்கள் மொழியம்மா
நன்மை காட்டும் வழியம்மா.
பழனி சோ. முத்து மாணிக்கம்


பாப்பா பாப்பா கைவீசு
பைந்தமிழ் படிக்கக் கைவீசு
ஒற்றுமை ஓங்கக் கைவீசு
உண்மை பேசக் கைவீசு.
ப. தேவகுரு - தேவதானப்பட்டி.


எறும்புக் கூட்டம் போலவே
இணைந்து வாழப் பழகுவோம்
கூடிவாழும வாழ்விலே
கோடி கோடி நன்மையே.
வே. முத்துலக்குமி - திருவானைக்கோவில்


காக்கா பாரு பாப்பா
கருப்பு நிறம் பாப்பா
காக்கா மனசோ வெளுப்பு
கற்றுக் கொள்ளு படிப்பு.
மு.வேங்கடசாமி - இராமச்சந்திராபுரம்


பச்சைக் கிளிகள் பாடும்
பறந்தே இரையைத் தேடும்
இச்சைக் கனியை நாடும்
இனிய இசையால் பாடும்.
ச.க.ஏகாம்பரம் - பொதட்டூர்பேட்டை


மல்லிகைப் பூக்கள் வெள்ளை
தாத்தா வேட்டி வெள்ளை
இட்லி கூட வெள்ளை
எங்க மனசும் வெள்ளை.
அ. மாணிக்கவல்லி - உத்திரமேரூர்.


தாய்த்தமிழ்ப்பள்ளிப் பாடல்கள்

குட்டிநாயும் குரைக்குது
குட்டை வாலை ஆட்டுது
எட்டி மேலே பாயுது
எங்கும் ஓடி வருகுது.

மயிலே மயிலே நீ ஆடு
வண்ணத் தோகை விரித்தா
டு ஒயிலாய் ஒரு கால் எடுத்தாடு
உயரே முகிலைக் கண்டாடு.

காலையில் எழுந்ததும் குளித்திடுவேன்
கல்விக் கூடம் சென்றிடுவேன்
தாய்மொழிக் கல்வி கற்றிடுவேன்
தமிழால் நானும் உயர்ந்திடுவேன்.

கருப்பு யாணை பெரியது
கட்டெரும்போ சிறியது
இமயமலை பெரியது
இந்தக் கல்லோ சிறியது.

எனக்குக் கைகள் இரண்டு
எனக்குக் கால்கள் இரண்டு
எனக்குக் கண்கள் இரண்டு
எனக்குக் காதுகள் இரண்டு
மூக்கு மட்டும் ஒன்று
காதும் கூட ஒன்று.

எங்கள் வீடு பாருங்கள்
எளிய வீடு பாருங்கள்
சுற்றும் முற்றும் பாருங்கள்
சற்று நின்று பாருங்கள்
எங்கும் குப்பை இல்லையே
ஈயும் கொசுவும் இல்லையே.

அம்மா நல்ல அம்மா
ஆசையுள்ள அம்மா
என்னை விட்டு அம்மா
இருக்க மாட்டாங்க சும்மா.

எங்கள் வீடு தமிழ் வீடு
எங்கள் நாடு தமிழ்நாடு
எங்கும் எதிலும் தமிழ் பேசும்
எங்கள் மக்கள் தமிழ் மக்கள்




மழலையர் பாடல்கள்
4 முதல் 5 அகவையினருக்கானது
(மழலையர்களுக்கான பாடல்கள்)

சேவலைப் பார் சேவலைப் பார்
சிப்பாயைப் போல - அது
கூவுது பார் கூவுது பார்
கொம்பொலி போல.

வெற்றி நடை போடுது பார்
வீரனைப் போல - போரில்
சுற்றி வந்து அடிக்குது பார்
சூரனைப் போல.

வாலையாட்டும் வண்ணத்தைப் பார்
வானவில் போல - அதி
காலையிலே எழுப்பிடும் பார்
காவலன் போல.

துரை. தில்லான் - சின்னாளப்பட்டி


கசட தபற வல்லினம்
கசக்கும் வேம்பு மருந்தினம்
ஙஞண நமன மெல்லினம்
ங ப்போல் உறவைக் காக்கணும்
யரல வழள இடையினம்
இரவில் உணவு குறையணும்
தமிழில் மெய்கள் மூவினம்
தமிழர் எல்லாம் ஓரினம்.

வெங்கடேச பாரதி - சட்டநாதபுரம்


தமிழே அமுதே நீ வாழ்க
தண்டமிழ் மொழியே நீ வாழ்க
தேனே சுவையே நீ வாழ்க
தென்றல் காற்றே நீ வாழ்க

பொதிகை பிறந்த பூந்தமிழே
பூமகளே உன் புகழ்வாழ்க
இமயம் போலே நீயுயர்ந்து
என்றும் புகழாய் வாழியவே.

வெ. சிவநேசன் - இராமச்சந்திராபுரம்


அம்மா கண்ணே அருகேவா
அழகுச் சிலையே அருகேவா
அப்பா செல்லம் அருகேவா
அழகுக் கிளியே அருகேவா

பட்டே சிட்டே அருகேவா
பழமே சுவையே அருகேவா
மொட்டே மலரே அருகேவா
முந்திரிச் சுவையே அருகேவா

தமிழேவியன் - சென்னை


"அ" முதல் "ஒள" வரை பனிரெண்டும்
அமுதத் தமிழின் உயிரெழுத்தாம்
"அ" "இ" "உ" "எ" "ஒ" ஐந்தும்
அளவொலி குறைந்த குற்றெழுத்தாம்
"ஆ" "ஈ" "ஊ" "ஏ" "ஐ" "ஓ" "ஒள"
அளவொலி மிகுந்து நெடிலெழுத்தாம்

த.தட்சணாமூர்த்தி - திருமலைராயன்பட்டினம்,


புன்னகை என்றும் புரிந்திடு
பொய்களை எதிர்த்து வென்றிடு
அனைத்து மொழியும் கற்றிடு
அமுதத் தமிழில் பேசிடு
கூடா நட்பை வெறுத்திடு
கூடி நீயும் வாழ்ந்திடு
விடாமல் முயற்சி செய்திடு
வெற்றிக் கனியைப் பறித்திடு

பள்ளி பள்ளி பள்ளி
பாடம் படிக்கப் பள்ளி
துள்ளி துள்ளி துள்ளி
விளையாடுவோம் துள்ளி
வெள்ளி வெள்ளி வெள்ளி
அக்கா கொலுசு வெள்ளி
அல்லி அல்லி அல்லி
அழகு மலரே அல்லி.

ச. சண்முக சிதம்பரம் - தரகம்பட்டி


பெற்றோர் காத்தல் நம்கடனே
பெரிதாய்க் கற்றல் நம்கடனே
உற்றார் போற்ற வாழ்ந்திடுதல்
உலகின் முதன்மைக் கடனாகும்.

வெற்றுப் பேச்சில் காலந்தான்
வீணாய்ப் போகும் அதனாலே
குற்றம் இல்லா வாழ்வுதனைக்
குறிக்கோளுடனே வாழ்ந்திடுவோம்.

இலக்கியன் - புதுச்சேரி


அம்மாவுக்கும் அப்பாவுக்கும்
செல்லப் பிள்ளை நான்
அண்ணணுக்கும் தம்பிக்குந்தான்
அன்புப் பிள்ளை நான்
ஆசிரியர் அனைவருக்கும்
ஆசைப் பிள்ளை நான்
வாழ்வில் ஓங்கி உயர்ந்திடவே
படிக்கும் பிள்ளை நான்.

அரி. இல. தமிழடியான் - உளுந்தூர்ப்பேட்டை


கோழி நல்ல கோழி
முட்டை யிடும் கோழி
குள்ள மான கோழி
குஞ்சைக் காக்கும் கோழி

பருந்து குஞ்சைத் தூக்கிட
பறந்து கிட்டே வந்திடப்
பாய்ந்து விரட்டும் கோழி
தாய்மை மிக்க கோழி

மி. அமலன் - திருச்சி


ஓடிப் பிடித்து விளையாடி
ஒன்றாய்ச் சேர்ந்து பழகிடுவோம்
கூடிப் பேசி மகிழ்ந்திடுவோம்
குணத்தில் சிறந்து விளங்கிடுவோம்

மானைப் போலே துள்ளிடுவோம்
மயிலைப் போலே ஆடிடுவோம்
தேனைப் போலே இனித்திடுவோம்
சேர்ந்தே கூடி மகிழ்ந்திடுவோம்

சாப்டூர் சதுரகிரியான் - மதுரை


சிட்டுக் குருவி வானிலே
சிறகடித்துப் பறக்குது
கொட்டும் அருவி மலையிலே
சலசலத்துக் கொட்டுது

குருவிபோல நாமுமே
கூடிவாழப் பழகுவோம்
அருவி போல நாமுமே
அனைவர் போற்ற வாழுவோம்.

ஆதிநாராயணமூர்த்தி - திமிரி


வெள்ளைப் பூனை வந்தது
வெறித்துப் பார்த்து நடந்தது
வீட்டில் எலியைக் கண்டது
விரட்டிக் கொண்டு சென்றது
ஓடி எலியும் ஓட்டையின்
உள்ளே சென்று மறைந்தது.
விரட்டும் பூனை நின்றது
மியாவ் மியாவ் என்றது.

அ. பக்கிரிசாமி - திருநள்ளாறு


அன்பே அமுதே எழுந்திடு
அன்னைத் தமிழை படித்திடு
அறிவாய் நீயும் வளர்ந்திடு
அறியாமை மீது போர்த்தொடு
உடும்பாய்க் கொள்கை பிடித்திடு
உயர்வு தாழ்வு சமனிடு
உரிமை மீட்கத் துணிந்திடு
உண்மை யாக வாழ்ந்திடு.

காய்ச்சிய நீரைக் குடி குடி
கரும்பை நன்றாய்க் கடி கடி
தாய்மொழிக் கல்வி படி படி
தடையாம் சுவரை இடி இடி
காற்றில் மாசு வடி வடி
மண்ணில் கழிவு துடி துடி
சாதிப் பாம்பை அடி அடி
துணிந்து செயலை முடி முடி.

கதிரவன் வந்தான் எழுந்திடு
கண்ணை நன்றாய்த் திறந்திடு
காலைக் கடனை முடித்திடு
கடமை செய்யத் துணிந்திடு
கல்விக் கரும்பைக் கடித்திடு
கசடை நீக்கிப் படித்திடு
கலைகள் அனைத்தும் கற்றிடு
காரிருள் நீக்கி வென்றிடு.

புதுவை தமிழ் நெஞ்சன் - புதுச்சேரி


www.thamizham.net - pollachinasan@gmail.com - 9788552061 - (04259)221278