இலக்கிய இணைய இதழ்
21 சனவரி 2007 - இதழ் எண் : 63

அன்புடையீர். வணக்கம்,

சூளேசுவரன்பட்டி தாய்த்தமிழ்ப் பள்ளியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. விழாவில் கையெழுத்துப் போட்டி, பேச்சுப் போட்டி, பாடல், நடனம் என மாணவர்களது கலை சார்ந்த திறனுக்குப் போட்டி வைக்கப்பட்டது. விழாவின் சிறப்பு நிகழ்வாக கோலப் போட்டி நடத்தப்பட்டது. பெற்றோர்களால் பொங்கல் வைக்கப்பட்டு, பெற்றோர்களும், மாணவர்களும் உண்டு மகிழ்ந்தனர். கல்வியின் நுணுக்கம் பற்றியும், தற்கால தொழில் நுட்பம் பற்றியும் தமிழ்க்கனல் உரையாற்றினார். துபாயிலிருந்து நண்பர் தொலைபேசி செய்து தமிழம் வலை பற்றி வாழ்த்தினார். பொங்கல் வாழ்த்து கூறிய, அனுப்பிய அனைவருக்கும் எனது அன்பான வாழ்த்துகள்.

தமிழ் ஓசை இதழின் களஞ்சியம் தொகுப்பில் வெளியான உலகம் முழுவதும் பொங்கல் நிகழ்வு கொண்டாடப்படுகிறது என்கிற கட்டுரையை இந்த இதழில் வெளியிடுவதில் மகிழ்வடைகிறேன்.

என்றும் அன்புடன்,
பொள்ளாச்சி நசன்,
21 சனவரி 2007



அறுவடைத் திருநாள்.

உலகம் முழுவதும் பொங்கல் நிகழ்வு


- சேவியர் -

தமிழர்களின் பண்பாட்டு அடையாளமாய் நிமிர்ந்து நிற்கிறது பொங்கல் விழா. தமிழகம், இலங்கை, போன்ற தமிழர் வாழும் நாடுகளில் மட்டுமல்லாமல் தமிழர்கள் புலம் பெயர்ந்துள்ள இடங்களிலும் பொங்கல் விழாவினைக் கொண்டாடி, தங்கள் இன, சமூக, பண்பாட்டு, வாழ்வியல் அடையாளங்களைத் தொலைந்து போகாமல் பார்த்துக் கொள்கிறார்கள். சுமார் ஐம்பது நாடுகளில் இன்று தமிழர்கள் தங்கள் விழாவைக் கொண்டாடுகிறார்கள்.

சங்ககாலமான கி.மு.இருநூறுக்கும் கி.பி. முன்னூறுக்கும் இடைப்பட்ட காலத்திலேயே தமிழர்கள் பொங்கல் விழர் கொண்டாடியதாக நம்பப்படுகிறது. அறுவடை விழாவாகக் கொண்டாடப்படும் பொங்கல், தங்களுக்கு நல்ல விளைச்சலைக் கொடுத்த இயற்கைக்கும், இறைவனுக்கும் நன்றி செலுத்தவும் தங்கள் கவலைகளை விலக்கிய புதிய பயணத்தைத் தொடங்கவும் கொண்டாடப்படுகிறது. மதங்களுக்கு அப்பாற்பட்ட ஒற்றுமையின் விழாவாகக் கொண்டாடப்படுகிறது.

தமிழகத்தில் பொங்கல் விழா கொண்டாடப்படும் அதே நாளில் இந்தியா முழுவதும் அறுவடை விழா பல பெயர்களில் கொண்டாடப்படுகிறது. வடஇந்தியாவில் லகோரி என்றும், அஸ்ஸாமில்க போகாலி பிகு என்றும், உத்தரப்பிரதேசம், குஜராத், மஹாராஸ்டிரா மற்றும் பீகாரில் மகர சங்கராந்தி என்றும், ஆந்திராவில் போகி என்றும் இந்த விழா கொண்டாடப்படுகிறது. கேரளாவில் இந்த நாளில் தான் மலையில் மகர சோதி ஏற்றப்பட்டு வழிபடப்படுகிறது.

தை நீராடல் என்னும் பொங்கல் விழாவின் முன்னோடியைக் குறித்த செய்திகள் கி.பி. நான்காம் நூற்றாண்டு - எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த இலக்கியங்களான ஆண்டாள், திருப்பாவை, திருவெம்பாவை போன்ற இலக்கியங்களில் குறிப்பிடப் பட்டுள்ளன.

பொங்கல் விழா தமிழர் விழாவாகப் பெருமையுடன் கொண்டாடப்படும் அதே வேளையில் பொங்கல் விழாவின் அடிப்படை நோக்கத்தினை முன்வைத்து இந்த விழா உலகெங்கும் கொண்டாடப்படுகின்றன.

ஆதி காலத்திலேயே விவசாயிகள் அறுவடை விழா கொண்டாடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். இதற்குப் பல காரணங்கள் இருந்தன. பயிர்களில் ஆவிகள் இருப்பதாகவும், அவை மனம் குளிர்ந்தால் விளைச்சல் அதிகமாகவும், இல்லையேல் குறைவாகவும் இருக்கும் என்று மக்கள் நம்பினார்கள். அது போல ஒவ்வொரு பயிருக்கும் ஒவ்வொரு காவல் தேவதை இருப்பதாகவும், அதனிடம் வேண்டுதல் செய்தால் அறுவடை அதிகரிக்கும் என்றும் நம்பினார்கள். அறுவடை செய்யும் போது பயிர்களிலுள்ள ஆவி கோபமடையும் என்பதும், அந்தக் கோபத்தைக் குறைக்க அவற்றுக்குப் படையல் செலுத்த வேண்டும் என்பதும் கூட ஆதியில் இருந்த நம்பிக்கைகளில் ஒன்று.

இதனடிப்படையில்தான் ஆதியில் அறுவடை விழாக்கள் இயற்கைக்கும், இயற்கையைப் பராமரிக்கும் தெய்வங்களுக்கும் ஆனந்தமளிப்பதற்காக நடத்தப்பட்டன. கிரேக்க, ரோம, எகிப்திய, எபிரேயப் பண்பாடுகள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அறுவடை விழா கொண்டாடியிருக்கின்றன.

கொரியாவில் அறுவடை விழா சூசாக் என்னும் பெயரில் கொண்டாடப்படுகிறது. செப்டம்பர் அக்டோபர் மாதங்களில் கொண்டாடப்படும் இந்த விழா நன்றி விழாவாகக் கொரிய மக்களால் கொண்டாடப்படுகிறது.

ஜப்பானியர்கள் நவம்பர் மாதத்தில் டோ ரி-னோ-இச்சி என்னும் பெயரில் அறுவடை விழா கொண்டாடுகிறார்கள். இரவு முழுவதும் ஆட்டம் பாட்டமாய் இந்த விழா குதூகலமூட்டுகிறது.

அமெரிக்காவில் நவம்பர் மாதத்தின் நான்காவது வியாழக்கிழமை நன்றி செலுத்தும் விழா கொண்டாடப்படுகிறது. சுமார் நானூறு ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கப்பட்ட இந்த விழா விளைச்சலுக்காக இறைவனுக்கு வந்னிற செலுத்தும் விழாவாகக் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் மக்கள் வாழ்த்துகள் பரிமாறிக் கொள்கிறார்கள். அமெரிக்கா வழி செல்லும் கனடாவில் அக்டோபர் மாதம் இரண்டாவது திங்கட்கிழமை இந்த விழா கொண்டாடப்படுகிறது. சைனாவில் மக்கள் ஆகஸ்ட் நிலா விழா கொண்டாடுகிறார்கள். இந்த விழாவின் முக்கிய உணவான மூன் கேக்குகளை மக்கள் பகிர்ந்து பரிசளித்து மகிழ்கிறார்கள்.

வியட்நாமில் - தெட்திரங் து என்னும் பெயரில் எட்டாவது லூனார் மாதத்தின் பதினைந்தாம் நாளில் கொண்டாடப்படுகிறது. பெற்றோர் தங்கள் விவசாய காலம் முடிந்து குழந்தைகளுடன் ஆனந்தமாய் ஒன்றித்திருக்கும் விழாவாக இந்த விழா அமைந்து குழந்தைகளை மையப்படுத்துகிறது.

இஸ்ரேலில் எபிரேய மாதமான திஸ்ரியின் பதினைந்தாவது நாள் சுக்கோத் விழா கொண்டாடப்படுகிறது. அறுவடை விழாவான இது நன்றி தெரிவித்தல் விழாவாகவும் கொண்டாடப்படுகிறது. சுமார் மூவாயிரம் ஆண்டுகளாக யூதர்கள் இந்த அறுவடை விழாவைக் கொண்டாடி வருகிறார்கள். இந்த விழா இன்று கிறித்துவர்களாலும் கொண்டாடப்படுகிறது.

ஆப்ரிக்காவில் யாம் என்னும் பெயருடன் இந்த விழா நடைபெறுகிறது. இந்த விழா ஆப்ரிக்காவில் சில பகுதிகளில் மூன்று நாள்கள் நடக்கிறது. இறந்து போன உறவினர்களை நினைவு கூறும் நிகழ்வுடன் தொடங்கும் இந்த விழா நல்ல விளைச்சலைத் தந்த இறைவனுக்கு, இயற்கைக்கு நன்றி செலுத்துகிறது. இரட்டையர்கள், மூவர் முதலானோர் இறைவனின் சிறப்புப் பரிசுகளாகக் கருதப்பட்டு இந்த விழாவில் பெருமைப்படுத்தப்படுவதுண்டு.

ரோமர்கள் அக்டோபர் நான்காம் நாள் செவிலியர் என்னும் விழாவைக் கொண்டாடுகிறார்கள். இது தங்களுக்கு நல்ல விளைச்சலைக் கொடுத்ததற்காக சோளப் பயிரின் பெண் தெய்வமான சீரஸ் என்பவருக்கு நன்றி செலுத்தும் விழாவாக, தங்கள் தெய்வத்திற்கு புதிய காய்கறிகள், பழங்கள், பன்றி போன்றவற்றைப் படைத்து, இசை, விளையாட்டு, நடனம் என விழாவைக் கொண்டாடுகிறார்கள். வினாலியா என்றொரு விழாவையும் இவர்கள் கொண்டாடுகிறார்கள். தங்கள் திராட்சைத் தோட்டங்களில் விளையும் முதல் திராட்சைத் குலையை இறைவனுக்குப் படைத்து அந்த விளைச்சல் காலத்தை ஆசிர்வதிக்க ஆண்டவனை வேண்டுகிறார்கள்.

எகிப்தியர்கள் விளைச்சல் விழாவில் காய்கறிகள் மற்றும் வளம் தரும் கடவுளான மின்னை வழிபாடு செய்கிறார்கள். இசை, நடனம் என கோலாகலப்படுகிறது. எகிப்தியர்களின் இந்த அறுவடை விழா.

ஆஸ்திரேலியாவிலும் ஏப்ரல் மாதக் கடைசியில் திராட்சை அறுவடை விழாவும், ஜனவரி மாதத்தில் லாவண்டர் மலர் அறுவடை விழாவும், மார்ச் மாதத்தில் ஆப்பிள் அறுவடை விழாவும், டிசம்பர் - ஜனவரி காலத்தில் கோதுமை அறுவடை விழாவும் கொண்டாடப்படுவது பல இடங்களில் வழக்கத்தில் உள்ளது.

ஜெர்மனியில் அறுவடை விழா அக்டோபர் விழா என்று அழைக்கப்படுகிறது. இந்த விழா திராட்சை அறுவடையின் கடைசியில் கொண்டாடப்படுகிறது. அக்டோபர் மாதத்தின் முதல் ஞாயிற்றுக் கிழமை இந்த விழா கொண்டாடப் படுகிறது. வண்ண மயமான பேரணிகளும், நடனங்களும் இந்த விழாவில் முக்கிய இடம் பிடிக்கின்றன.

மலேசியாவில் சூன் மாதம் இரண்டாம் நாள் அறுவடை விழா கொண்டாடப்படுகிறது. அரிசி விளைச்சலுக்காக கடவுளுக்கு நன்றி செலுத்தும் விழாவாக இந்த விழா கொண்டாடப்படுகிறது. புதிய அரிவாள்களுடன் அறுவடை செய்து, வயல்வெளிகளில் கூடி இந்த விழாவை இவர்கள் கொண்டாடுகிறார்கள்.

இங்கிலாந்தில் அறுவடை வீடு என்னும் பெயரில் இந்த விழா கொண்டாடப்படுகிறது. செப்டம்பர் மாதம் கொண்டாடப்படும் இந்த விழாவில் பழங்களையும், காய்கறிகளையும் இறைவனுக்குப் படைக்கும் விழாவாகவும், நன்றி செலுத்தும் விழாவாகவும் இது கொண்டாடப்படுகிறது. ஆலயங்களை எல்லாம் அலங்கரித்து மக்கள் அறுவடை செழிக்க வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறார்கள்.

இவ்வாறு உலகெங்கும் கொண்டாடப்படும், அறுவடைவிழாக்கள் இயற்கையோடு மனிதனுக்கு உரிய தொடர்பையும், இறைவனோடும் - அருகிலுள்ள மனிதர்களோடு மனிதன் கொள்ளுகிற உறவையும் -வெளிப்படுத்துபவைகளாகத் திகழ்கின்றன.



சூளேசுவரன்பட்டி தாய்த்தமிழ்ப் பள்ளி மாணவர்கள் பொங்கல் விழாவில் கோலம் போடும் காட்சி


இனியவன் உரைவீச்சுகள்

- இனியவன் ஹாஜி முஹம்மது -

அலைபாயும் கடல் தாண்டி
அரபு நாடு வந்தோம்
அமைதியின்றி நாளும்
அல்லல் படுகின்றோம்.

வேலை வேண்டி பாலை மணலில்
பணிகள் செய்கின்ற
எங்கள் வேலை எல்லோர்க்கும்
பாடமாக இருக்கும்.
புத்தகத்தைச் சுமக்கும்
கைகள்
பாஸ்போர்ட்டைச் சுமக்கும்
படைத்தோனின் விளையாட்டைப்
பார்த்துள்ளம் சிரிக்கும்

வெற்றி வானின் பறக்க வேண்டி
விமானத்தில் பறக்கும்
வளர்ந்து வரும் எழிலுலகை
வேடிக்கைப் பார்க்கும்,

காடுகளைச் சீர்செய்து
கழனிகளாய் மாற்றும்
கல்தூக்கி மண் தூக்கி
கட்டிடங்கள் கட்டும்

கடன்பட்டு வந்ததினால்
கடுமையாக உழைக்கும்
காசுபணம் சேர்க்க வேண்டி
சோகங்களைச் சுமக்கும்.

இருள் வாழ்வை ஒளியாக்க
இரவிலும் உழைக்கும்
அருள்தரவே இறைவனை
அணுதினமும் உழைக்கும்.

விதியின் சீற்றத்தால்
வீதிகளைக் கூட்டும்
விளையாட்டுப் பருவத்தில்
வீட்டு வேலை செய்யும்.

வேலை வேண்டி பாலை மணலில்
பணிகள் செய்கின்ற
எங்கள் வாழ்க்கை எல்லோர்க்கும்
பாடமாக இருக்கும்.
இங்கு
உயர்கல்வி கற்றுவந்தால்
உயர்ந்த வேலை வாய்ப்பு
பலமொழிகள் அறிந்திருந்தால்
இன்னும் கூடச் சிறப்பு

தொழில் நுட்பம் தெரிந்தவர்க்கிங்கே
அதிக வேலை வாய்ப்பு
வியாபாரம் செய்வோர்க்கிங்கே
பலமான வரவேற்பு.

துபை - 10 - 10- 1999


கடவுளை மற மனிதனை நினை

கடவுளை மற
மனிதனை நினை
சொன்னவர் ஒரு சாமி
அவர்தாம் பெரியார் இராமசாமி.

கடவுள் ஒருவனே என்று
கற்றவன் நான்
கடவுளை மற என்றால்
புதுமை தானே ?

புதிய மார்க்கம்
புதுப்புது விளக்கம்
பகுத்தறிவுப் பாதையில்
பயணம் செய்தேன்.

ஏன் எதற்கு
எப்படி என்ற
கேள்விக் கணைகள்
என்னுள் எழுந்துள்ளன.

கடவுளைப் பற்றி
கற்றிட முயன்றேன்.
திறந்த மனதுடன்
தெளிந்த அறிவுடன்.

அண்டமும் பிண்டமும்
படைத்தவன் கடவுள்
உன்னையும் என்னையும்
படைத்தவன் கடவுள்,

படைத்தவனை நம்பு
படைப்புகளை நம்பாதே
என்றார் ஒருவர்.

கண்டவர் விண்டிலர்
விண்டவர் கண்டிலர் - என
வேதாந்தம் பேசினார்
மற்றவர்.

படைத்தவன் ஒருவன்
காப்பவன் ஒருவன்
அழிப்பவன் ஒருவன் - ஆக
மூன்று கடவுளார் உண்டென
முழங்கினார் மூன்றாமவர்.

கடவுளின் குமாரனாய்
பிறந்தவர் ஒருவர்.
அவரை நம்பு - அவர்தாம்
கடவுள் என்றார் நான்காமவர்

அவதாரப் புருஷர்
அவனியில் அரசர்
நம்பு என்னை என்றேயொருவர்
நயம்பட உரைத்தார்.

கண்ணுக்கும் காணாமல் காண்பவன்
கடவுள் என்றனர் சிலர்.
கண்டதையெல்லாம் கடவுள்
என்றார் வேறுசிலர்

ஒன்று மட்டும் புரிந்தது எனக்கு
ஒன்றே கடவுள்
என்பதில் இல்லை பிரச்சனை
எந்த ஒன்று என்பதில்தான் பிரச்சனை
கடவுள் பற்றி
கொஞ்சம் தெரிந்தேன்.
மதங்கள் வேதங்கள் படித்து
கொஞ்சம் தெளிந்தேன்.

கடவுளும் மதங்களும்
உண்மையாய் இருந்து போகட்டும்
கடவுளுக்காய் வெட்டிச் சாய்வதில்
என்ன அப்படியொரு பேரின்பம்,

உண்மையான பேரின்பம்
ஒற்றுமையில் தானே இருக்கிறது.
வேற்றுமையாய் விலகி வாழ
எந்த வேதங்கள் சொல்கின்றன.

ஒன்றே குலம் ஒருவனே தேவன்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
என்ற தத்துவம்
என்னைக் கவர்ந்தது
.
மதங்களை விடவும்
புனிதம் மிகுந்தது
மனித நேயமே யென்ற
மகத்துவம் புரிந்தது.

பகுத்தறிவாளர்
பெரியாரின் முழக்கம்
என்னை அழைத்தது.
கடவுளை மற, மனிதனை நினை,

- காட்டுமன்னார்குடி 1985



தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061