இலக்கிய இணைய இதழ்
18 செப்டம்பர் 2006 - இதழ் எண் : 57

அன்புடையீர். வணக்கம்,

ஓலைச் சுவடிகள் பற்றிய குறிப்பும், உலகத்தமிழர் மாநாட்டுச் செய்தி பற்றிய குறிப்பும், பொன்.குமார் அவர்களது உரைவீச்சுகள் சிலவும் இந்த இதழில் இடம்பெறுகின்றன. இதழுக்கு உதவுகிற அனைத்து உள்ளங்களுக்கம் என் நன்றிகளை உரித்தாக்குகிறேன். படைப்பாளிகள் தங்களின் படைப்பாக்கங்களை அனுப்பி வைக்கவும்.

என்றும் அன்புடன்,
பொள்ளாச்சி நசன்,
18 - 09 - 2006



மாற்றிக் கொள்ள விருப்பமில்லை

பொன். குமார்.

குழி
உடனிருந்தே
நீ தோண்டிய குழியில்
நான்.
அடடா...
நீயாவது எச்சரிக்கையாக
இருந்திருக்கக் கூடாதா?
யாரோ தோண்டிய குழியில்
நீயும்.

நீ
வேர் செலுத்தி
வான் நோக்கி
கிளை விரித்து
பூ மலர்த்தி
காயாக்கி
விதையாக்கும் வித்தை
தன்னுள்ளிருப்பது தெரியாமல்
வீணே கிடக்கிறது
குப்பை மேட்டில்
ஒரு வீரிய விதை.

வழக்கு
விட்டுக் கொடுத்தலே
வாழ்க்கை
விட்டுக் கொடுத்தல்
யார் என்பதே
வழக்கு.

முரண்
வாங்கிய உண்டியலில்
சேமிக்கிறாய்
உண்டியல் வாங்க
சேமிக்கிறேன்.

கொடுக்கு
ஒவ்வொரு மாதமும்
தள்ளிப் போகும் நாள்களில்
இன்னுமா ஆகலை?
என்று பதறுகிறாய்.
சந்தேகப்படுகிறாயோ என்று
நெஞ்சில் முள் குத்தும்.
மாதாந்திர வலிகளைவிட
கொடுமைதானம்மா
உன் சந்தேகம்.

ஏராளம்
தாத்தாவிடமிருந்தது
தந்தையிடமில்லை.
தந்தையிடமிருந்தது
என்னிடமில்லை.
என்னிடமிருந்தது
மகனிடமில்லை.
இல்லாதவை இருக்கின்றன
ஏராளம்.

மணல் வீடு
கரையோர மணலில்
வீடு கட்டி விளையாடினார்
அப்பா.
அப்பன் பெறாத பேறை
பிள்ளை பெற்றான்.
நடு ஆற்றிலேயே
கட்டி விளையாடுகிறான்
மணல் வீடு.

இடைவெளி
ஒரு குழந்தைக்கும்
மறு குழந்தைக்கும்
தேவை இடைவெளி
இடையிலேயே
கொல்லப்படுகின்றன
ஏராளமானவைகள்

என்னுடையது
இது என்னுடையது
இப்பொழுது
இது என்னுடையது.
இதற்கு முன்
எவருடையதாயினும்
பின் யாருடையது என்றாலும்
இப்பொழுது இது
என்னுடையது.

நன்றி : மாற்றிக்கொள்ள விருப்பமில்லை நூல்


ஓலைச்சுவடிகள்

முனைவர் வே.கட்டளை கைலாசம்

மக்கள் எழுதப் பயன்படுத்திய பொருள்களின் அடிப்படையில் சுவடிகளை ஓட்டுச்சுவடி, எலும்புச்சுவடி, மூங்கிற்சுவடி, லிபர் சுவடி, மரப்பட்டைச்சுவடி, பூர்ச்ச மரப்பட்டைச் சுவடி, தோல் சுவடி, உலோகச் சுவடி, துணிச் சுவடி, பலகைச் சுவடி, பனை ஓலைச்சுவடி, என பலவகைப் படுத்துகின்றனர். பனை மரங்களில் நாட்டுப்பனை (borasus flaballifer/ palmyar) சீதாளப்பனை எனப்படும் கூந்தல் பனை (coripha umbra calibra) லந்தர் பனை (coripha utan) ஆகிய மூன்று வகையான பனைமரங்களின் ஓலைகள் எழுதுவதற்குப் பயன்பட்டன. இவற்றில் நாட்டுப் பனையோலையே மிகுதி.

தென்னிந்தியாவில் நாட்டுப்பனை அதிகமாக வளர்கிறது. இந்த ஓலைகள் மிகவும் தடிமனாகவும் நீளம் குறைந்தும் காணப்படும். இவ்வகைப் பனை மரங்களின் ஓலைகள் 4 செ.மீ முதல் 6 செ.மீ வரை அகலமும் 60 செ.மீ முதல் 90 செ.மீ வரை நீளமும் உள்ளதாக இருக்கும்.

இந்தியாவின் மேற்குக் கடற்கரை, இலங்கை, மலேசியக் கடற்கரை ஆகிய பகுதிகளில் கூந்தற்பனை மரங்கள் அதிகம் வளர்கின்றன. சுந்தற்பனையின் ஓலைகள் மிக மெல்லியதாகவும் வழவழப்பாகவும் நன்கு வளைந்து கொடுக்கும் தன்மையும் கொண்டது.

மூன்றாவது வகையான லந்தர் பனை ஓலைகளும் எழுதுவதற்குப் பயன்படுத்தப்பட்டன. இவ்வகைப் பனை மரங்கள் இந்தியாவின் வடகிழக்கு பகுதிகள், பர்மா, தாய்லாந்து, ஆகிய இடங்களில் அதிகமாக வளர்கின்றன.

ஓலைகள் எழுதுவதற்கேற்பப் பதப்படுத்தும் முறையை ஏடு பதப்படுத்துதல் அல்லது பாடம் செய்தல் என்று கூறுவர். எழுதுவதற்குத் தயாரிக்கப்பட்ட ஓலை வெள்ளாலை அல்லது வெற்றேடு எனப்படும். புத்தக ஏடுகளாக உதவும் படி ஓலையைச் சீவிக் செம்மையாக்குவதை ஓலை வாருதல் அல்லது ஏடு வாருதல் என்பர்.

செம்மை செய்யப்பட்ட ஏடுகளின் இருபுறமும் அளவாகத் துளைகள் போடப்படும். இத்துளைகள் ஓலைக் கண்கள் எனப்படும். இரு துளையிடப்பட்ட ஓலைகளில் இடப்பக்கம் நூல் கயிறு கோர்த்தும் வலப்பக்கம் மெல்லிய குச்சியைச் செருகியும் சுவடி தொய்வடையாவமல் காக்கப்படுகிறது. குச்சிக்குப்பதில் பித்தளை அல்லது இரும்பாலான கம்பியையும் பயன்படுத்துவதுண்டு. இந்தக் குச்சி அல்லது கம்பிக்கு நாராசம் என்று பெயர். இது கள்ளாணி என்றும் கூறப்படுகிறது.

ஓலைச் சுவடியில் எழுதுவதறகுப் பயன்படும் ஆணியை (styles) ஓலைதீட்டுப்படை, எழுத்து ஊசி, எழுத்தாணி என்பர். ஏட்டுச்சுவடியின் இருபக்கங்களிலும் இரண்டு மரச்சட்டங்களைச் சேர்ப்பர். இச்சட்டத்திற்கு கம்பை என்பது பெயர். ஏட்டுச்சுவடிகளைக் கட்டுவதற்குப் பயன்படுத்தும் கயிற்றின் தலைப்பில் பனையோலையை அதன் ஈர்க்குடன் கிளிமூக்குப் போலக் கத்திரித்துக் கட்டியிருப்பர். அதற்குக் கிளி மூக்கு என்பது பெயர். சுவடிகளைப் பாதுகாப்பாக வைப்பதற்கும் எடுத்துச் செல்வதற்கும் பயன்படுத்திய பலகையைத் தூக்கு என்றும் அசை என்றும் கூறுவர். கவளி என்பார் சேக்கிழாரடிகள். தூக்குகளைத் தூக்கிச் செல்லும் ஆட்கள் தூக்குத் தூக்கி என அழைக்கப்பட்டனர். அரசர் கூறும் செய்தியை ஓலையில் எழுதுவர். திருமந்திரவோலை அவர்கள் தலைவன் திருமந்திர வோலைநாயகம்.

ஓலைச்சுவடி பாதுகாத்தல் - திருநெலவேலியைச் சார்ந்த கவிராயர் ஓலைச்சுவடிகளில் எழுதி இலக்கியங்களைப் பாதுகாத்துள்ளார். எட்டையபுரம், சிவகிரி,சொக்கப்பட்டி, ஊற்றுமலை - குறுநில மன்னர்களும் வரதுங்கூராம பாண்டியன், அதிவீரராம பாண்டியர், வடமலையப்ப பிள்ளையன் போன்றோர் ஏடுகளைத் தொகுத்துள்ளனர். திருவாடுதுறை, தருமபுரம், திருப்பனந்தாள், காஞ்சி ஞானப்பிரகாசர் மடம், மதுரை திருஞான சம்பந்தர் மடம் ஆகியனவும், குடந்தை, சிதம்பரம், திருவண்ணாமலை, துறையூர், மயிலம் முதலிய இடங்களில் உள்ள வீர சைவர்களும் ஏடுகளைத் தொகுத்தும் வெளியீடுகள் புரிந்தும் தமிழ்த் தொண்டு செய்துள்ளனர்.

அரசினர் கீழைநாட்டுக் கையெழுத்து நூல் நிலையம் (கர்னல் காலின் மெக்கன்சியின் சேகரிப்பு), சரசுவதி மகால் நூல் நிலையம், மதுரைத் தமிழ்ச் சங்கம், டாக்டர் சுவாமி நாதையர் நூல் நிலையம் எனப் பல இடங்களில் சுவடிகள் சேகரிக்கப்பட்டு வைக்கப் பட்டுள்ளன. தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகமும், அரசு அருங்காட்சியகமும், தொல்பொருள்துறை, சித்த மருத்துவக் கல்லூரி போன்று பல இடங்களில் தனியார் பலரிடம் ஓலைச் சுவடிகள் உள்ளன, வெளி நாட்டு நூலகங்களிலும் தமிழக ஓலைச் சுவடிகள் இருக்கின்றன.

திருநெல்வேலி ஓலைச் சுவடிகள் - இலக்கியம், கலை, மருத்துவம், ஜாதகம், ஜோதிடம், கணிதம், நிகண்டு, நாட்டார் வழக்காறுகள் என்ப பலவகைச் செய்திகள் எழுதப்பட்ட ஓலைச் சுவடிகள் திருநெல்வேலியிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் மிகுதியாக உள்ளன. திருநெலவேலி பகுதியில் கவிராயர் குடும்பங்களில் மிகுந்த ஓலைச் சுவடிகள் உள்ளன. அண்ணாவிகள் எனப்படும் ஓலைச்சுவடி பள்ளரி ஆசிரியர்கள் களியாட்டம், போன்றவற்றையும் நாட்டார் நாடகம் நிகழ்த்தும் அண்ணாவிகள் நாடகச் சுவடிகளையும் பாதுகாத்து வருகின்றனர். வைத்தியர்கள் எனப்படும் நாட்டு மருத்துவர்களும் ஓலைச் சுவடிகளில் இருந்து மருத்துவத்தை அறிந்து மருந்து கொடுத்து வருகின்றனர். ஜோதிடர்கள், புதிண வண்ணார், குறி சொல்லும் குறவர், வில்லிசை கலைஞர், கணியான் எனப் பலர் ஓலைச் சுவடிகளைப் பரம்பரை பரம்பரையாகப் பாதுகாத்து வருகின்றனர். ஜமீன்தார், பண்ணையார் வீடுகள், கோவில்கள், தனியார் பலரின் வீட்டு பூஜை அறைகளிலும் ஓலைச் சுவடிகளைக் காணலாம். பழைய பொருட்களை வாங்கி விற்பவர்களிடமும் ஓலைச் சுவடிகள் உள்ளன. புலவர்கள், அண்ணாவிகள், இற்ந்த வீடுகளில் ஏடுபடிப்போர்கள் எனப் பலரும் ஓலைச் சுவடிகளை வைத்துள்ளனர்.

இன்றும் பலரிடம் ஓலைச் சுவடிகள் முடங்கிக் கிடக்கின்றன. அவற்றைக் கண்டுபிடித்து வெளிக் கொணர வேண்டும். இன்றைக்கும் எத்தனை கிராமங்களில் நாட்டுப்புறத்து வீடுகளில் எத்தனை சந்து பொந்துகளில் என்னென்ன ஏடுகள் கறையானுக்கு இரையாகி வருகின்றனவோ? மிஞ்சிய மீதம் இன்னும் எத்தனை இருக்கின்றனவோ? உ,வே,சா செல்லாத இடங்கள் இன்னும் எத்தனையோ? அங்கெல்லாம் என்னென்ன இலக்கியங்கள் புழுங்கி மடிந்து கொண்டிருக்கின்றனவோ? யார் கண்டார்கள்?

இவைகளை மீட்டெடுத்து தமிழுக்கு வளம் சேர்ப்பது ஒவ்வொரு தமிழனின் தலையாய கடமையல்லவா?

நன்றி : கதை சொல்லி இதழ் ஆகஸ்ட் 2006

நன்றி : மாற்றிக்கொள்ள விருப்பமில்லை நூல்




உலகத் தமிழர் பேரமைப்பு மாநாடு.

சேலத்தில் பரபரப்பான சூழலில் உலகத் தமிழர் பேரமைப்பு மாநாடு தொடங்கியது. இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து தமிழ் அறிஞர்கள் கலந்து கொண்டனர். இதையொட்டி பாதுகாப்புப் பணிக்காகப் போலீசார் குவிக்கப்பட்டனர்.

உலகத் தமிழர் பேரமைப்பின் 4 ஆம் ஆண்டு நிறைவு மாநாடு சேலம் அழகாபுரம் ரத்தினவேல் கவுண்டர் திருமண மண்டபத்தில் ஆகஸ்ட் 12, 2006 அன்று காலை தொடங்கியது. விழாவில் மா.அர்த்தனாரி கொடியேற்றினார். வரவேற்புக் குழுத் தலைவர் மு.பாலசுப்பிரமணியம் வரவேற்றுப் பேசினார். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக முன்னாள் துணை வேந்தர் க.ப.அறவாணன் தொடக்க உரை ஆற்றினார். மாநாட்டு மலரை மணவை முஸ்தபா வெளியிட்டார். அதை சந்திரேசன், சாகுல் அமீது, பரந்தாமன், ஆகியோர் பெற்றுக் கொண்டனர். அதைத் தொடர்ந்து பல்வேறு நூல்கள் வெளியிடப்பட்டன.

மாநாட்டில் க.ப.அறவாணன் பேசியதாவது. கடலின் நடுவில் ஏற்படுகிற சிறு சுழி பெரிய அலையாக மாறுகிறது. அதே போல் இன்று சேலத்தில் நடைபெறும் இந்தச் சிறு சுழி பெரிய புயலாக உருவாகும். ஐரோப்பிய நாட்டினர் அடிமையாக இருக்கவில்லை. அதேபோல் அடிமையாக வாழவும் விரும்பவில்லை, அதே போல் தமிழர்களும் வாழ வேண்டும்.

உலக இலக்கியங்களுடன் ஒப்பிடுகையில் தமிழ் இலக்கியம் குறைந்தது இல்லை. தமிழர்கள் அடிமை கூலி அகதி என்ற மூன்று நிலைகளில் உள்ளனர். இந்த நிலை மாறவேண்டும்.

மாநாட்டில் மணவை முஸ்தபா பேசும்போது எந்த முயற்சிகள் எடுத்தாலும் இடையூறுகள் வரும். தமிழன் தமிழ் உணர்வுடன் வாழ வேண்டும் என்பதற்காக உலகத் தமிழர் பேரமைப்பு உருவாக்கப்பட்டது. இன ஒற்றுமை, மொழி, வளர்ச்சி ஆகியவை இரண்டும் இரண்டு கண்கள். மொழி வளர்ச்சிக்காக இது போன்ற பேரமைப்புகள் அவசியம் என்றார்.

மாநாடு நடைபெறும் திருமண மண்டபத்திற்கு ஏராளமான போலீசார் வந்திருந்தனர். அவர்களை வெளியே செல்லுமாறு மாநாட்டுக் குழுவினர் கூறினர். அதையடுத்து அவர்கள் வெளியே சென்றனர். இந்த நிலையில் உளவுப் பிரிவு போலீசார் மாநாட்டுச் செய்தியை சேகரிப்பதற்காக வந்தனர். அவர்களை மாநாட்டுக்கு வந்திருந்தவர்கள் வெளியே செல்லுமாறு கோஷம் எழுப்பினார்கள்.

அவர்களை அமைதிப்படுத்தி உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ.நெடுமாறன் பேசினார். அவர் பேசியதாவது.

இன்றைய தினம் பெரிய அளவில் மாநாடு நடக்கிறபோது இது போன்ற கூச்சல் போடுவது தவறு. எத்தகைய எதிர்ப்பு வந்தாலும் அதைச் சந்திக்க நாம் தயாராக உள்ளோம். யாராலும் நம்மை எதுவும் செய்திட முடியாது என்பதை இந்த மாநாட்டின் மூலம் தெரியப் படுத்துகிறோம், உலகத் தமிழர் பேரமைப்பில் 150 க்கும் மேற்பட்ட தமிழ் அமைப்புகள் இணைந்துள்ளன. கடந்த 3 நாள்களில் நடந்த நிகழ்வுகளால் மாநாடு சீர் குலைந்து விட்டது. பேராளர்களுக்குத் தனியாக இடம் ஒதுக்கி அமரச் செய்து விவாதிக்கத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் நடந்த நிகழ்வுகளால் இன்று காலை 10 மணி வரை மாநாட்டு அமைப்பு பணிகள் நடைபெற வேண்டியதாயிற்று.

இந்தத் திருமண மண்டபத்தைக் கொடுக்க இரவு 1 மணி வரை போலீசாார் தடுத்தனர். உயர்நீதிமன்றம் அனுமதித்தும், அதிகார வர்ககம் அனுமதி மறுத்தது. அதிகார வர்கத்தை அடக்கி வைக்க வேண்டியது ஆட்சியாளர்களிடம் உள்ளது. இந்த சேலத்தில் சிறையில் கம்யூனிஸ்டுகள் 22 பேர் கொல்லப்பட்ட போது சிறை அதிகாரிகளை யாரும் எதுவும் சொல்லவில்லை. மாறாக ஆட்சியாளர்களைத் தான் உலகம் குற்றம் சொல்லியது.

இன்றைய தினம் பல அமைப்புப் பேராளர்கள் வந்துள்ளனர். உலகத் தமிழர் பேரமைப்பில் பல்வேறு அமைப்புகள் இணைந்துள்ளன. இதற்கென்று உறுப்பினர்கள் கிடையாது. அவர்களுக்கென்று ஒரு செயல் திட்டம் உள்ளது. கொள்கை, கோட்பாடு உள்ளது, அதில் உலகத் தமிழர் பேரமைப்பு தலையிடாது.

உலகத் தமிழர் பேரமைப்பு மாநாட்டுக்காக இந்தியா முழுவதும் பலவேறு பகுதிகளில் இருந்து தமிழ் அறிஞர்களும், வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் பலரும் வந்துள்ளீர்கள். அனைவரம் ஒன்று சேர்ந்து பல்வேறு பகுதிகளில் வாழும் தமிழர்களின் பிரச்சினை குறித்தும், அதை தீர்ப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் விவாதிக்கப்பட இருக்கிறது. இதில் அரசியல் பேச வேண்டாம். - இவ்வாறு பேசினார்.

தொடர்ந்து காலை தமிழ் அமைப்புகளின் பேராளர்கள் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. மாலை உலகத் தமிழராய் இணைவோம் என்ற தலைப்பில் கவியரங்கம் நடைபெற்றது. தொடர்ந்து இசை நிகழ்ச்சி நடைபெற்றது. அதைத் தொடர்ந்து அனைத்து மாநிலத் தமிழர் கருத்தரங்கம் நடைபெற்றது. இதற்கு இந்தியா-இலங்கைத் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு அமைப்பாளர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கினார். அனைத்து கேரளத் தமிழ்ப் பேரவைத் தலைவர் முத்துராமன் தொடக்கவுரையாற்றினார். இரவு தமிழறிஞர்கள் வாழ்த்தரங்கம் நடைபெற்றது.

இதில் வெளிநாடு, வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

நன்றி : யாதும் ஊரே இதழ் செப் 2006



தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061