செம்மொழி - தொடரும் ஏமாற்று வேலை.
செம்மொழி பற்றிய இந்திய அரசின் அறிவிப்புகள் தமிழர்களை ஏமாளிகளாக்கும் முயற்சிகளாகவே
தொடர்கின்றன.
மத்திய மனிதவளத்துறையினால் தமிழ் செம்மொழி அறிவிப்பு வெளியிடப்படாமல் மத்தியப் பண்பாட்டுத் துறையின்
மூலம் வெளியிடப்பட்டது ஏமாற்று வேலையாகும்.
சமக்கிருதம் முதலான செம்மொழிகளோடு தமிழைச் சேர்க்க மனமில்லாமல் இரண்டாந்தரச் செம்மொழியாக
ஆக்கவே பண்பாட்டுத்துறை மூலம் அறிவிக்கப்பட்டது எனத் தமிழ் அறிஞர்களின் கண்டனம் எழுந்தது.
சம்பந்தப்பட்ட மனிதவளத்துறை அமைச்சர் அர்சுன்சிங் பதிலளிக்காமல் கொஞ்சமும் சம்பந்தமில்லாத
சுற்றுலாத்துறை அமைச்சர் ராசா பின்வரும் விளக்கம் தந்தார்
"சமக்கிருதம், பாலி, பிராகிருதம், பாரசீகம், அரபு ஆகிய மொழிகள் செம்மொழிகள் என மரபு வழியில் கொண்டாடப்
பட்டாலும் இதுவரை இந்திய அரசு அம்மொழிகளைச் செம்மொழிகள் என அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை.
உண்மையில் இப்போதுதான் இந்திய அரசால் முதல் செம்மொழியாகத் தமிழ் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்
தொடர்ச்சியாக இனி சமக்கிருதம் உள்பட மொழிகள் செம்மொழிகளாக அறிவிக்கப்பட இருக்கின்றன" என
அறிவித்துத தமிழர் காதில் பூ சுத்தினார்.
ஆனால் 14-8-2005 அன்று குடியரசுத் தலைவர் மாளிகையில் இவ்வாண்டு செம்மொழி விருதுகள் வழங்கும்
விழா நடைபெற்றது. சமக்கிருத அறிஞர்கள் 15 பேர், பாலி அறிஞர் ஒருவர், பிராகிருத மொழி அறிஞர் மூவர்,
அரபு மொழி அறிஞர் மூவர், பாரசீக அறிஞர் மூவர் ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
தமிழறிஞர் ஒருவருக்குக் கூட விருது வழங்கப்படவில்லை. அமைச்சர் ராசா மற்றும் ஆளும் கூட்டணியைச் சேர்ந்த
பலர் அளித்த வாக்குறுதிகள் காற்றோடு காற்றாகக் கலந்துவிட்டன.
உண்மையில் சமக்கிருதம் உள்ளிட்ட சில மொழிகளே இந்திய அரசால் செம்மொழிகளாக ஏற்கப்பட்டுள்ளன
என்பதும், அந்தப் பட்டியலில் தமிழுக்கு இடமில்லை என்பதும் அம்பலமாகி விட்டது.
தொடர்ந்து ஏமாறுவது தமிழர்களின் வழிவழி வந்த பழக்கமோ ?
நன்றி : ஏழைதாசன் - அக் 2005
இக்குறிப்பின் தொடர்ச்சியாக பல சிந்தனைகள் நம்முள் எழுகின்றன.
அப்படியே இந்திய அரசு அளிக்க முன்வந்தாலும் நம்முள் உள்ள பிளவுகளின் காரணமாக செயகாந்தன்
போன்றவர்களுக்கு அளிப்பதும் - அதன் தொடரியாகச் சர்ச்சைகள் எழுவதும், பின் அடங்கிப் போவதும - எனச்
சடங்குதான் நிறைவேறும். மொழி வல்லுநர் ஒருவருக்குப் பரிசு கிடைக்காது.
தமிழ் இலக்கணப்புலவர் திருமிகு
திருமுருகனார் அவர்கள் (புதுவை) புதுவை அரசால் விருது கொடுத்தும், அரசால் மக்களுக்குத் தமிழ் மொழி
தொடர்பான எதுவும் நகராது என்ற கட்டத்தில் விருது பெற்ற அனைவரும் திருமுருகனார் தலைமையில் "விருது
திரும்ப வழங்கு விழா" என அறிவித்துத் தாரை தப்பட்டைகளோடு முழக்கி, ஊர்வலமாகச் சென்று -
பணமுடிப்பையும் விருதையும் திருப்பிக் கொடுத்த தன்மை - வீறுடைய செம்மை - நிமிர்வு - தமிழுக்காக
இயங்காத தன்மைக் கெதிராகக் கிளர்ந்தெழுதல், என்பவை வேறு எந்த மொழியிலுமே நடக்காது.
அடிவருடிகளாகத் தன்புகழை வளர்த்தெடுக்காது மக்களுக்காக இயங்குகிற தமிழ் மறவர்கள் தமிழ் மொழியில்
இருப்பதால் தான் விருது வழங்கவில்லை என்றே எனக்குத் தோன்றுகிறது. இதுவே பெருமைதான். எப்படியும்
அடுத்த ஆண்டிற்குள் ஒரு அடிவருடியை உருவாக்கி அவர்களுக்கு விருது வழங்குவார்கள், இது நடக்கும்.
செம்மொழியின் தொடரியாக தனிப்பட்ட மனிதர்களுக்கு விருதுகள் வேண்டாம். அரசிடமிருந்தோ,
தனியாரிடமிருந்தோ - தமிழ் மொழி வளர்ச்சிக்காகத் திரட்டப்படுகிற ஒவ்வொரு காசும் பின்வரும் அடிப்படைக்
கட்டமைப்பிற்காகத் திட்டமிட்டுச் செயற்படுத்தவேண்டும்.
தமிழ் மொழி வளர்ச்சிக்கான அடிப்படைக் கட்டமைப்பான
1) தமிழ் மொழியை தொடக்கக் கல்விவரை தமிழ் நாட்டில் கட்டாய்ப் பயிற்று மொழி ஆக்குதல்.
2) முதுநிலை வரை தமிழ்மொழிப் பாடம் இல்லாத பாடத்திட்டத்தைத் தமிழ்நாட்டில் புறந்தள்ளுதல்
3) தமிழில் படித்தவர்களுக்கு முன்னுரிமையும், வேலைவாய்ப்பும் தமிழ்நாட்டில் அளித்தல்.
4) வளர்ந்து வருகிற அனைத்துத் துறைகளுக்குமான தமிழ்ப் பெயர்ப்பையும், பாடத்திட்டங்களையும் ஆக்குதல்.
5) தொன்மையும், வளமையும் நிறைந்த தமிழ் மொழியின் பல்வேறு கூறுகளை (ஓலைச் சுவடிகள், நூல்கள், இதழ்கள்,
வரலாற்று எச்சங்கள் - போன்றவற்றை) நுட்பமாகத் திரட்டி தமிழ், தமிழர் வரலாறு காட்ட அடித்தளமிடுதல்.
6) தரமாக இயங்குகிற தமிழுணர்வாளர்களுக்கு அடித்தளம் அமைத்து வளர்த்தெடுத்தல்.
இந்த நிலையடைய நாம் அனைவரும் ஒன்றிணைந்து திட்டமிடுவோம். வெற்றி பெறுவோம்.
|