கடல் புடை சூழ்ந்த இவ்வுலகின்கண்ணே பயிலுறும் மொழிகள் அனைத்தையும் ஆராய்ந்து
வகுத்து அடைவுபடுத்தி நின்ற மொழி நூற்புலவர்கள் அவை யிற்றை ஆரிய மொழிகள், துரானிய மொழிகள் என
இரு பகுப்பினும் அடக்குவாராயினர்.
ஆரிய மொழிகளுள் அடங்குவன பலவற்றுள்ளும் தமிழ் மெர்ழி தலை சிறந்ததொன்றாம். எனவே சமஸ்கிருதமும்
தமிழும் வேறு வேறு மொழிகளென்பது வெள்ளிடை மலையென விளங்கும். ஆகவும், சிலர் தமிழ் முன்னதன்
வழிமொழியேயன்றித் தனிமொழியென்றென வாய் கூசாது கூறுவாராயினர். சமஸ்கிருதமும் தமிழும் ஒரே
நாட்டின்கண் முறையே வடக்கினும் தெற்கினுமாக வழங்கிய காரணம் பற்றி இவ்விரண்டும் தம்மிற் சில்லாற்றாற்
கலப்பனவாயின. அங்ஙனங்கலப்புழி ஒன்று பேச்சு வழக்கற்று ஏட்டு வழக்காய் மடடில் நிற்ப, மற்றொன்று
இருவகை வழக்கினும் நின்றமையால் முன்னதன் சொற்பொருள்கள் பல பின்னதன்கட்போந்து
வழக்கேற்பனவாயின. இது மொழிநூல் முறையே இதனை யெய்யாதார் கூற்று ஒதுக்கற்பாலதெனவிடுக்க.
இனி மொழிநூற் புலவர்கள் வகுத்த வகை ஒருபுறமிருப்பச் சிலர் தமிழ் மொழியின் ஏற்றமுணராது மயங்கிப்
பிறிதுபட வகுத்தனர். வடமொழியை உயர்தனிச் செம்மொழியினும் (Classical Language) தென்மொழியை
உண்ணாட்டு (Vernacular Language) யினும் அடக்கி வகைப் படுத்தினர். அங்ஙனம், வகைப்படுப்புழி
ஒன்று உயர்வும், மற்றொன்று தாழ்வுமாம் என்ற உட்கருத்துடன் படுப்பாராயினர். அவ்வுட்கருத்துச் சின்னாட்களில்
வலியுறுவதாயிற்று.
தனிமொழியொன்றை அதன் வழிமொழிகளோடு வகைப்படுத்தலாமோ ? அது முன்னதனை இழிவு படுத்தத்
தகாதோ? தமிழனை உண்ணாட்டு மொழிகளுட்படுத்ததேயன்றித் தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய
அதன் வழிமொழிகளோடு ஒரு நிகரெனக் கூறலாமோ? ஆரியமொழிகள் தலைநின்ற வடமொழியை அதன்
பாகதங்களோடு ஒருங்குவைத்து எண்ணத் துணியாமைபோலத் துரானிய மொழிகளுள் தலைநின்ற
தென்மொழியை அதன் வழிமொழிகளோடு ஒருங்கு வைத்து எண்ணத் துணியாதிருத்தலே அமைவுடைத்து.
இவ்வாறெல்லாம், நமது சென்னைச் சர்வகலா சாலையார் மேற்கூறியாங்குத் தமிழை இழிவு படுத்த வகுத்தபோதே,
தமிழராயினர் முற்புகுந்து அவ்வாறு வகைப்படுத்தல் சாலாதென மறுத்திருத்தல் வேண்டும். அப்போழ்தெல்லாம்
வாய்வாளாமை மேற்கொண்டிருந்து விட்டனர். இப்போழ்தத்துச் 'சர்வகலாசாலை விசாரணை' (Universities
Commission) யில் தமிழ்மொழிக் கல்வியை யோக்கியதைப் பட்டப் பரீக்ஷைகளினின்றும் ஒதுக்கி விட்டனர்.
வடமொழி மடடில் உயர்தனிச்செம்மொழியாதலின் வைத்துக் கொள்ளப்பட்டது.
ஈ தென்னை வம்பு! அவ்வுயர்தனிச் செம்மொழி என்பதன் இலக்கணந்தானென்னை? அதனைச் சிறிது
ஆராய்வோம். தான் வழங்கும் நாட்டின் கணுள்ள பழமொழிகட்குந் தலைமையும் அவை யிற்றினும் மிக்க
மேதகவுடைமையுமுள்ள மொழியே உயர் மொழி என்பது இவ்விலக்கணத்தால் ஆராய்ந்த வழி. நம் தமிழ்மொழி
தென்னாட்டில் வழங்கும் தெலுங்கு, கன்னட, மலையாள, துளுவங்களுக்கெல்லாம் தலையைமயும் அவையிற்றினும்
மிக்க மேதகவுடைமையால், தானும் உயர்மொழியே யென்க. தான் வழங்கு நாட்டில் பயிலும் ஏனைய மொழிகளின்
உதவியின்றித் தனித்தியங்கவல்ல ஆற்றல் சான்றதே தனிமொழி எனப்படும். தான் பிறமொழிகட்குச் செய்யும்
உதவி மிக்கும் அவை தனக்குச் செய்யும் உதவி குறைந்தும் இருத்தலே வழக்காறு.
தமிழ் மொழியின் உதவி களையப்படின், தெலுங்கு, கன்னடம், மலையாளம் முதலியன இயங்குதலொல்லா,
மற்று, அவையற்றினுதவி களையப்படினும் தமிழ்மொழி சிறிதுமிடர்ப்படுதலின்றித் தனித்து இனிமையி
னியங்கவல்லது. இஃது இந்தியமொழி நூற் புலவர்கள் பலர்க்கும் ஒப்பமுடிந்தது. ஆதலின், நம் தமிழ்மொழி
தனிமொழியே யென்க. இனிச் செம்மொழியாவது யாது?
திருந்திய பண்புஞ் சீர்த்த நாகரிகமும் பொருந்திய தாய்மொழி புகல்செம்மொழியாம் என்பது இலக்கணம்.
இம்மொழி நூல் இலக்கணம் நம்முடைய தமிழ்மொழியின் கண்ணும் அமைந்திருத்தல் தேற்றம். என்னை ?
இடர்ப்பட்ட சொல்முடிபுகளும், பொருள் முடிபுகளும் இன்றிச் சொற்றான் கருதிய பொருளைக் கேட்டான்
தெள்ளிதின் உணராவற்றாய்ப் பழையன கழிந்து புதியனபுகுந்து திருத்த மெய்திநிற்றலே திருந்திய
பண்பெனப்படுவது. இது தமிழ் மொழியின்கண் முற்றும் அமைந்திருத்தில் காண்க.
நாட்டின் நாகரிக முதிர்ச்சிக் கேற்பச் சொற்களும் ஏற்பட்டுப் பாஷைக்கும் நாகரிகநலம் விளைத்தல் வேண்டும்.
அவ்வாறு சொற்களேற்படுமிடத்துப் பிற பாஷை சொற்களன்றித் தன் சொற்களே மேற்கோடல் வேண்டும்.
இவையும் நம் உயர் தனித் தமிழ் மொழிக்கும் பொருந்துவனவாம். ஆகவே, தமிழ் தூய்மொழியுமாம். எனவே,
தமிழ் செம்மொழி என்பது ஒருதலை. இதுபற்றியன்றே தொன்று தொட்டு நம் தமிழ்மொழி 'செந்தமிழ்'
என நல்லிசைப் புலவரால் நவின்றோதப் பெறுவதாயிற்று.
ஆகவே, தென்னாட்டின்கண் சிறந்தொளிராநின்ற நம் அமிழ்தினுமினிய தமிழ்மொழி எவ்வாற்றானாராய்ந்த
வழியும் உயர்தனிச் செம்மொழியேயாம் என்பது திண்ணம். இத்துணை உயர்வுஞ் சிறப்பும் வாய்ந்த நம் அருமைத்
தமிழ் மொழியை, உண்ணாட்டுப் புன்மொழிகளோடு ஒருங்கெண்ணுதல் தவிர்த்து, வடநாட்டுயர் தனிச்
செம்மொழி சமஸ்கிருதமெனக் கொண்டாற்போல, தென்னாட்டுயர் தனிச் செம்மொழி தமிழெனக் கொண்டு
விதிகள் வகுத்தலே ஏற்புடைத்தாம்.
இதனை நமது கனம் பொருந்திய இராஜப்பிரதிநிதியவர்களும், சர்வகலாசாலையின் அவயவிகளும்
உள்ளவாறே கவனித்து நடப்பார்களாக. இவர்கள் தமக்கு என்றுங் குன்றாப் பழியை விளைவிக்கத் தக்க
செயலிற் புகாது, புகழ் பயக்கற்பால நல்லாற்றிற் சென்று நம் தமிழ் மொழியும் உயர் தனிச் செம்மொழி யென்றே
கொண்டு ஒழுகுவார்களாக. ஆலவாயிற் பெருமானடிகளாகிய இறையனார் திருவருள் பெற்ற நம் தமிழ்மகள்
என்றுந் தலை கவிழாது ஒளிர்க.
( சூரிய நாராயண சாஸ்திரியார் : ஆங்கில மொழிப் புலமையுடைய இவர் தமிழின் மீது கொண்ட பற்றால் சூரிய நாராயண சாஸ்திரியார் என்ற தமது
பெயரை பரிதிமாக் கலைஞர் என்று மாற்றிக் கொண்டார். தமது 33 ஆவது வயதிலேயே மரணமடைந்து (1903)
விடுகிற, இவர் நவீன படைப்பிலக்கிய வரலாற்றில் 17 நூல்களை எழுதியுள்ளார். இவரும், எம்.எஸ்.பூரணலிங்கம்
பிள்ளையும் இணைந்து ஞானபோதினி எனும் மாத இதழினை நடத்தியுள்ளனர். சென்னை இலிங்கி செட்டித்
தெருவிலிருந்து 5 - 6 ஆண்டுகள் ஞானபோதினி இதழ் வெளிவந்தது)
குறும்பாக்கள்
(o) எலிக்கு எதிரி
குட்டிக்கு நண்பன்
பூனையின் பல்.
(o) கொத்தனார் பணி
அரசியல் பணியானது
இடிப்பது கட்டுவது.
(o) ஆயிரம் நெல்லுக்கு
ஓர் அந்துப் பூச்சி
மதவெறி.
(o) அயல்நாடு கடத்தல்
கடவுள் சிலைகள்
அவனின்றி ஓரணுவும் அசையாது.
(o) தங்கைக்குத் தடையுத்தரவு
அண்ணன் சென்றான்
காதலிக்க.
(o) பறவை கூண்டில்
புள்ளிமான் வலையில்
மழலை பள்ளியில்.
(o) கொஞ்சம் நில் இரயிலே
தண்டவாளத்தில்
இரயில் வண்டிப்பூச்சி.
(o) எல்லோரும் பேசினால்
கேட்பது யார் ?
பாராளுமன்றம்.
நன்றி : இரா. இரவியின் - உள்ளத்தில் கைய்க்கூ நூல்
(o)குறைந்தது குறைந்தது தட்சணை
பிறந்தது பிறந்தது பிரச்சனை
எரிந்தது எரிந்தது அடுப்பறை
கரிந்தது கரிந்தது கருவறை.
(o)வறுமையே வறுமையே வாட்டுகிறாய்
பசியின் கொடுமையை காட்டுகிறாய்
பிறந்தது ஏனெனச் சுட்டுகிறாய்
பிறப்பை அழித்திடத் தயங்குகிறாய்
ச.அஸ்மா - கோவை - 43.
தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061