முள்ளும் கல்லும் பாதம் கிழிக்க
பாம்பும் பூச்சியும் விசம் கொண்டலைய
துரத்தும் காட்டுக் காக்கியிடமிருந்து தப்பி
கொடி அறுத்து வந்தால்தான்
அன்று ஒருநாள் வாழ்வை
மீட்டுக் கொள்ளலாம்.....,
கூடை பின்னி
வயிற்றை நிரப்பிக் கொள்ளலாம்......,
தொங்கும் பாம்பைக் கொடியென அறுத்தவள்
வேரற்ற செடியாய் உயிரற்றுப் போனாள்
பாலில்லா ஆறு மாசக் குழந்தை
அழுதழுது செத்துப்போச்சு.......
குச்சுக் குள்ளிருந்து சடங்கு முடிந்து
காட்டிற்கு வந்தவளைத் தின்று
தூர எறிந்தது ரேஞ்சர் கழுகு
குதறப்பட்ட எலியாய்ப் பிணமாக்கப்பட்டாள்,......
எதிர்காலக் கனவுகள்
சாம்பலாய் எஞ்சின.
அதிர்ச்சியால் அம்மா பைத்தியமானாள்.
குடித்தே தகப்பன்
குடல் வெந்து செத்தான்......
கொத்துப் பூவாய் மலர்ந்த
குடும்பம் கருகிப் போச்சு,
இவற்றினூடே
பாலுக்கழுகும் சிசுவை எண்ணி
காட்டிற்குச் செல்கிறார்கள்
கொடி அறுத்து வந்து
கூடையோடு வாழ்வையும்
பின்னிக் கொள்ள,,
பாப்லோ அறிவுக்குயில்
நன்றி - நிகழ் காலாண்டிதழ் எண் 22, சிற்றிதழ்ச் செய்தி ஆக 1992
செடி
என் வீட்டு வாசலில்
இருக்கும்
பூந்த் தொட்டி
நான் வைத்ததில்லை.
இதை எழுதும் கணத்தில்
அதில்
எத்தனை அரும்புகள்
என்பதும் தெரியாதெனக்கு.
எனினும்
தண்ணீர் விடுகிறேன் ஈரங்காயாமல்
செடியை வைத்தவனுக்கோ
இது குறித்த அக்கறையேதும் இருந்ததில்லை.
பூப்பறிக்கிறான் அவன்
நீரூற்றுகிறேன் நான்
பூக்கிறது செடி
யாருக்கென்பது அறியாமல்.
- கவிதாபாரதி-
நன்றி - கணையாழி இதழ் அக் 1999
பரிதி ஆத்திச்சூடி - 3
பிறப்பில் பிரிவில்லை
பீலியின் அழகு பார்
புன்னகை மொழியறி
பூக்களோடு பேசு
பெண்ணடிமை ஒழி
பேரறிவு கொள்.
பைங்கூழ் காத்தல் செய்
பொருள் படப்பேசு
போராடுங்குணங் கொள்
மதங்களை மாய்
மாயைக்கு இடங்கொடேல்
மிகைப்படுத்தாதே
மீட்டெடு மானுடம்
முக்காலமும் கனி
மூடநம்பிக்கையில் மூழ்காதே
மெய்யறிவைப் பெருக்கு
மேன்மை நிலையடை
மையிருட்டில் மனம்புதை
மொழிகளை நேசி
மோப்ப உணர்வு கொள்
யாரும் அடிமையில்லை
வஞ்சகம் செய்யேல்
வாக்கு தவறாதே
விழிக்கொடை சிறப்பு
வீழ்ந்தாலும் எழு
வெல்லவே வாழ்
வேளாண்மையே வேர்
வையம் போற்று
வெளவ குணங்கொள்
நன்றி - மா.தமிழ்ப்பரிதி,
35 மூன்றாம் மேட்டுத்தெரு, சின்னசேலம், அ,கு.எண் 606 201.
நூல் பெயர் - பரிதி ஆத்திச்சூடி, விலை உரூ.12
தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061