கரவொலி : நாகர்கோவிலிலிருந்து மனோ தங்கராஜ், அரிகரசுதன் ஆகியோரது மேற்பார்வையில் தொடங்கப்பட்டுள்ள முதல் இதழ். நம்நாட்டில் உள்ளவற்றை நடப்பவற்றை படம்பிடித்துக் காட்டும் நிழல் கண்ணாடியாய், நாட்டு மக்களை நடுநிலை பிறளாத நீதிபதிகளாக்க உதவி செய்யும் ஊன்றுகோலாய் இருந்து சமூகத்திற்கு அறவழி காட்டி, மனித வாழ்வை மேன்மையுறச் செய்யும் சமூக நடுநிலை இதழாக வெளிவர இதழ் திட்டமிட்டுள்ளது. சுப. உதயகுமாரின் தலைவர் எனப்படுபவர் யார் என்ற கட்டுரை - கற்பனைத் தலைவரை நம் கண்முன் நிறுத்துகிறது. நோபல் பரிசு பற்றிய செய்திகள், பேரிடர் முன்னெச்சரிக்கை கருத்துப்பட்டறை, இலவச சட்ட உதவி, அழிவை எதிர்நோக்கும் குமரி மாவட்ட நன்னீர் ஆதாரங்கள், தண்ணீர் தேசத்தின் தாகம், முன்னேற்றச் சிந்தனைகள், பொருள்படட்டும் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள், குமரி மாவட்டத்தின் அழிந்துவரும் நீர்வளங்கள், கொல்லும் சொல், பூமிக்குப் பாரமாய், போபால் விசவாயுக் கசிவு நினைவுகள் - என்கிற கட்டுரைகள் இந்த இதழில் இடம் பெற்றுள்ளன. ஆழத்தாக்கம், வெட்ட வெளிதனிலே, காத்து காத்து - என்கிற குறும்படங்கள் பற்றியும் குறிப்பிட்டுள்ளது. பொன்னீலன் அவர்களது ஜிவா என்றொரு இலட்சியச் சுடர் - கட்டுரையும் இதழில் உள்ளது. முதல் இதழே மிகத் தரமாகத் தொடங்கப் பட்டுள்ளது.



தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,